கொலஸ்ட்ரோல் என்றதும் அச்சம் வேண்டாம்
மாரடைப்பு ஸ்ரோக் முதலான உயிர்க்கொல்லி நோய்கள் பற்றி உரையாடும்போதெல்லாம் கொலஸ்ட்ரோல் பற்றிய அச்சம் இன்று பலரிடம் பரவலாக இருப்பதை காண்கிறோம்.இதனால் கொழுப்பு உணவுகள் எல்லாவற்றையும் கட்டுப்படுத்த ஆரம்பிக்கிறோம். முட்டை, பால் ,இறைச்சி உள்ளிட்ட பல உணவுகளை தவிர்க்கின்றோம்.இதனால் எமக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் புரதம் மற்றும் நுண்போசனைகளை இழந்துவிடுகிறோம் என்பதை பற்றி சிந்திக்க மறந்து விடுகிறோம்.உலகமயமாதலுடன் ஏற்பட்ட சில தப்பான புரிதல்களே இதற்கு காரணமாக இருக்கிறது.சுகாதார கல்வி அறிவூட்டலின் தவறான விளைவுகளும் கூட இதற்கான காரணம் எனலாம்
நாம் உண்ணும் கொழுப்பு உணவுக்கும் கொலஸ்ட்ரோலின் அளவு அதிகரிப்புக்குமிடையே நெருங்கிய தொடர்பு இருப்பதாக சொல்லப்படுகின்ற போதிலும் இது எவ்வாறு ஏற்படுகின்றது என்பது பற்றிய தெளிவு இல்லை.உடற்கொழுப்பை கொழுப்பு உணவு அதிகரிப்பதனால் நீரிழிவு, உயர்குருதி அழுத்தம் என்பன ஏற்படுவதனால் இதன் விளைவாக மாரடைப்பு ஏற்படும் சாத்தியம் உண்டு.எனினும் குருதி கொலஸ்ட்ரோலின் அளவை கட்டுப்படுத்துவதற்காக கொழுப்பு உணவுகள் சிலவற்றை தவிர்ப்பதில் பயனுள்ளதா என்பது கேள்விக்குறியே .மொத்த உணவில் கொழுப்பின் அளவை பதினைந்து வீதத்திற்கு அதிகரிக்காமலும் காபோவைதரேட் உணவை 65வீதத்திற்கு மேற்படாமலும் பார்த்துக் கொள்வது அவசியம்.எனினும் கொழுப்பு உணவுகள் சிலவற்றை தவிர்த்தலோ அளவுக்கு அதிகமாக கட்டுப்படுத்துவதோ அவசியமில்லை.
அளவாக உட்கொள்ளலாம்.
எமக்கு தேவையான கொலஸ்ட்ரோலின் பெரும்பகுதி எமது உடலிலுள்ள ஈரலிலேயே தயாரிக்கப்படுகின்றது.சில மாமிச உணவுகளிலேயே நேரடியான கொலஸ்ட்ரோல் உடலில் சேர்கின்றது.நாம் உண்ணும் கொழுப்பு வகைகள் அனைத்தும் குடலில் ஜீரணமடைந்து கொழுப்பு அமிலங்களாக உறிஞ்சப்படும். அதேவேளை எஞ்சிய கொழுப்பு சமிபாடடையாமல் மலத்துடன் வெளியேறுகின்றது.உற்பத்தியாக்கப்படுகின்ற கொலஸ்ட்ரோலுக்கும் கழிவகற்றப்படுகின்ற கொலஸ்ட்ரோலுக்கும் இடையான அளவே குருதி கொலஸ்ட்ரோலின் அளவை தீர்மானிக்கின்றது.குருதி கொலஸ்ட்ரோலின் அதிகரிப்பே தீமையானது.
ஈரலில் கொழுப்பு அமிலங்களிலிருந்து தினமும் ஒருவருக்கு தேவையான கொலஸ்ட்ரோல் ஈரலில் தயாரிக்கப்படுகின்றது.இதை மூளையும் ஜீன்களும் நிர்வகிக்கின்றன.கொழுப்பு உணவை அதிகம் உட்கொள்ளாதவர்களில் கூட காபோவைதரேட் உணவுகள் கொழுப்பாக மாற்றப்பட்டு தேவையான கொழுப்பு கூறுகளும் கொலஸ்ட்ரோலும் ஈரலினால் தயாரிக்கப்படுகின்றன.
கொலஸ்ட்ரோல் என்றதும் எல்லோரும் ஏதோ வேண்டாத பொருளாக நினைக்கின்றார்கள் கொலஸ்ட்ரோல் எமக்கு மிகவும் அத்தியாவசியமான ஓர் உணவுக் கூறுதான்.எமது மூளையின் பெரும்பகுதி கொலஸ்ட்ரோலால் உள்ளிட்ட கொழுப்புகளினாலேயே ஆக்கப்பட்டுள்ளது.
அவ்வாறே உடலிலுள்ள கலச்சுவர்களிலும் கொலஸ்ட்ரோல் இன்றியமையாதது. கோடான கோடி கலங்கள் எமது உடலில் உள்ளன.அப்படியாயின் அவற்றின் சுவர்களிலுள்ள கொலஸ்ட்ரோலின் அளவை கணித்துப் பாருங்கள்.கொலஸ்ட்ரோல் LDL HDL TRIGLXEERIDESஎன பலகூறுகள் இருக்கின்றது. இதில் HDL (High Density Lipoprotein) கொலஸ்ட்ரோல் தேவைக்கு அதிகமாக குருதியில் சேருகின்ற ஏனைய கொலஸ்ட்ரோலின் கூறுகளை வெளியேற்ற உதவுகின்றமையால் இதை நல்ல கொலஸ்ட்ரோல் என்று அழைப்பார்கள்.இந்த பணியில் ஈரலிலுள்ள இரண்டுவகை Receptors தொழில்படுகின்றன.ஒருவரின் வயது அதிகரிக்கும்போது இவற்றின் எண்ணிக்கையும் தொழிற்பாடும் குறைவடைவதாக தெரிகின்றது.இந்த நிலையில் தான் கொலஸ்ட்ரோலின் அளவு குருதியில் அதிகரிக்கின்றது.இதனால் குருதிக் கலங்களில் இவவற்றின் படிவும் அதிகரிக்கின்றது.இதனால் அடைப்புகளும் குருதிக் கட்டிகளும் ஏற்படும் சாத்தியம் அதிகரிக்கின்றது. பரம்பரையாக சிலரில் ஏற்படும் கொலஸ்ட்ரோலை அதிகரிக்கச் செய்யும் நோய்களும் அபூர்வமாக மிக இளமையில் ஏற்படுகின்ற புறசேரியா (Progeria) முதலான நோய்களும் கூட கொலஸ்ட்ரோலின் அளவை அதிகரிக்கச் செய்கின்றன.இதய நோயாளர்களில் கணிசமானோர் பரம்பரை தொடர்பு உள்ளவர்களாக காணப்படுகின்றனர்.
virakesari.lk 05 09 2016