எஞ்சியிருப்பது இராதந்திரப் போராட்டம் அதனை சம்பந்தன் – சுமந்திரன் கையில் எடுத்துள்ளார்கள்!
30 06 2020
எஞ்சியிருப்பது இராதந்திரப் போராட்டம் அதனை சம்பந்தன் – சுமந்திரன் கையில் எடுத்துள்ளார்கள்!
மழைவிட்டும் தூவானம் விடவில்லை என்பார்கள். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஆ. சுமந்திரன் சிங்கள ஊடகம் ஒன்றுக்குச் சிங்களத்தில் கொடுத்த நேர்காணல் பற்றிய வாதம், எதிர்வாதம் நின்ற பாடில்லை..Colombo Telegraph என்ற இணையதளத்தில் ததேகூ பேச்சாளர் சுமந்திரன் ததேகூ இல் இருந்து உடனடியாக விலக வேண்டும் (TNA Spokesperson Sumanthiran Should Resign From The TNA Immediately) என்ற தலைப்பில் மனோன்மணி சதாசிவம் ஒரு நீண்ட, நெடிய கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். கொழும்பு தெலிகிறாவ் என்ற இணையதளம் எல்லாவிதமான கருத்துக்களுக்கும் இடம் கொடுக்கும் ஒரு இணையதள ஊடகம். தமிழ்சார்பான, தமிழ் எதிர்ப்பான கட்டுரைகள், கருத்துக்கள் அதில் வெளிவரும். கட்டுரைகள் பற்றி எழும் விமரிசனத்துக்கு கட்டுப்பாடு எதுவும் கிடையாது என்று சொல்லலாம்.
மனோன்மணி சதாசிவம் பற்றிய அறிமுகத்தில் அவர் ஒரு சட்டத்தரணி என்றும் சிறிலங்கா, வவுனியா மாவட்ட மற்றும் வவுனியா குற்றவியல் நீதிமன்ற பதில் நீதிபதியாகவும் (Magistrate) இருப்பதாகச் சொல்லப்பட்டுள்ளது. மேலும் அவர் ஒரு மனிதவுரிமை செயற்பாட்டளர் என்றும் பல ஆட்கொணர்வு வழக்குக்களைத் தாக்கல் செய்தவர் என்றும் கூறப்பட்டுள்ளது.இன்று யாராவது தன்னைப்பற்றி விளம்பரப்படுத்த விரும்பினால் அப்படிப்பட்ட ஒருவர் சுமந்திரனுக்கு எதிராக (1) அறிக்கை விட வேண்டும் (2) பகிரங்கக் கடிதம் எழுத வேண்டும் (3) அவரது கொடும்பாவியை எரிக்க வேண்டும். வேறு வழியில்லை.
மனோன்மணி அவர்கள் எழுதிய நீண்ட கட்டுரையில் சுமந்திரனுக்கு மனிதவுரிமை பற்றி ஒன்றுமே தெரியாது, பன்னாட்டுச் சட்டம் பற்றிய அறிவு அவருக்கு அறவே கிடையாது, அவருக்கு இனச் சுத்திகரிப்பு – இனப்படுகொலை இந்த இரண்டுக்கும் வித்தியாசம் தெரியாது, உண்மையில் அவர் எப்போதுமே கொழும்பைத் தளமாகக் கொண்ட ஒரு பண ஆசை கொண்ட வணிக வழக்கறிஞராக இருந்தார், வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழர்களின் வாழ்க்கையைப் பற்றி ஒருபோதும் அவர் கவலைப்பட்டது கிடையாது (In fact, he always remained a money-minded commercial lawyer based in Colombo and never cared about the lives of the Tamils in the North and East).
மனோன்மணி அவர்களது கருத்து அபத்தமானது. அருவருக்கத்தக்கது. அவரது மொழிநடை வெறுக்கத்தக்கது. சுமந்திரன் ஒரு வணிக வழக்கறிஞர் என்று சுயபுத்தியுள்ள எவனும் சொல்ல மாட்டான்.
மனோன்மணி தனது வாதத்துக்கு வலுச் சேர்க்கப் பலரது அறிக்கைகளை மேற்கோள் காட்டுகிறார். ஆனால் தமிழ்த் தேசியத் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் விடுத்த அறிக்கையை அவர் வசதியாக இருட்டடிப்புச் செய்து விட்டார்.சனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் மீது ஆயிரம் குற்றச்சாட்டுக்களை அடுக்கலாம். ஆனால் அவருக்குச் சட்டம் தெரியாது, பன்னாட்டுச் சட்டம் தெரியாது, வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழர்களின் வாழ்க்கையைப் பற்றி ஒருபோதும் அவர் கவலைப்பட்டது கிடையாது என்று குற்றம்சாட்டுக்கள் அடிப்படையில்லாதவை.ரசியலமைப்பு தொடர்பான சிவில் வழக்குகள் பேசுவதில் சுமந்திரன் இன்ற முதல் இடத்தில் இருக்கிறார்.
சமந்திரன் 2015 இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்களின் அமோக ஆதரவோடு நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டவர். யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் 58,044 விருப்பு வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்தவர். அவர் ததேகூ இல் இருந்து விலக வேண்டும் அல்லது வெளியேற்ற வேண்டும் என்பதில் பொருள் இல்லை.
இப்போது உச்ச நீதிமன்றம் விசாரிக்கும் சனாதிபதி கோட்டாபய இராசபக்சவின் நாடாளுமன்றத்தைக் கலைக்கும் வர்த்தமானி அறிவிப்பு, தேர்தல்கள் ஆணைக் குழுவின் யூன் 20 ஆம் திகதி பொதுத் தேர்தல் வர்த்தமானி அறிவிப்பு ஆகியவற்றுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஏழு அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணை நடைபெற்று வருகிறது. வழக்கு விசாரணை நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 18 ஆம் திகதி முதல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட மனுக்கள் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, நீதியரசர் களான புவனேக அலுவிகாரே, சிசிடி அப்ரூ, பிரியந்த ஜயவர்தன, விஜித் மல்கொட ஆகிய ஐவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் நடைபெற்று வருகிறது. எட்டாவது நாளாக இன்று காலை 10 மணியளவில் ஐவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டன. நேற்று (வியாழக்கிழமை) 3 மணி நேர விசாரணையை அடுத்து அது 8ஆவது தட வையாக நாளை வரை மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கை சட்டமா அதிபர் உட்பட ஏழு மனுதாரர்கள் தாக்கல் செய்துள்ளார்கள். அதில் மனுதாரர்கள் சரிதா குணரத்தின மற்றும் விக்டர் ஐவன் சார்பாக சனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் தோன்றி வாதாடி வருகிறார். கடந்த மே மாதம் 18 ஆம் திகதி இந்த வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது சுமந்திரன்தான் தொடக்க வாதத்தை முன்வைத்தார். வழக்குகளின் விசாரணை முடிவில் தொகுப்புரையையும் சுமந்திரனே ஆற்ற இருக்கிறார்.
2018 ஒக்டோபர் 26 அன்று சனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம மந்திரியைத் திடீரெனப் பதவி நீக்கி விட்டு அவருக்குப் பதிலாக, 2015 யனவரியில் இடம் பெற்ற சனாதிபதித் தேர்தலில் தன்னால் தோற்கடிக்கப்பட்ட, பரந்தளவில் முறைகேடுகளுடன் தொடர்புபட்ட முன்னாள் சனாதிபதி மகிந்த இராசபக்சவை நியமித்த போது இலங்கை ஒரு அரசியலமைப்பு ரீதியான நெருக்கடிக்குள் தள்ளப்பட்டது. அரசியல் கட்சிகளால் நாடாளுமன்றத்தில் ஒரு நம்பிக்கை வாக்கெடுப்புக் கோரிக்கை விடுக்கப்பட்டதும் சனாதிபதி பாராளுமன்றத்தைக் கலைத்து 2019 ஜனவரி 5 ஆம் திகதி புதிய தேர்தலை நடத்த அழைப்பு விடுத்தார். இந்நடவடிக்கைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் சம்பந்தன் தாக்கல் செய்த வழக்கில் அவர் சார்பாக சுமந்திரன் தோன்றி வாதிட்டார். நாடாளுமன்றத்தைக் கலைத்தது செல்லாது என உயர் நீதிமன்றம் ஒரு வாரலாற்றுப் புகழ்பெற்ற தீர்ப்ப்பை வழங்கியது.
இந்த இரண்டு வழக்குகளுமே இன்று இலங்கையில் அரசியலமைப்பு தொடர்பான வழக்குகளில் சனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் ஒரு திறமையான வழக்கறிஞர் என்பதை எண்பித்துள்ளது.
இனி, சுமந்திரன் சிங்கள ஊடகவியலாளர் சமுதித்த (Chamuditha Samarawickrama) அளித்த நேர்காணல் பற்றிப் பார்ப்போம். இருபத்தொரு மணித்துளிகள் நீடித்த இந்த நேர்காணலில் சுமந்திரனிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டன.
சமுதித்த: தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்க முக்கிய காரணம் என்ன?
சமுதித்த: தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பது விடுதலைப் புலிகளின் அரசியல் பகுதியா?
சமுதித்த: தமிழ் தேசிய கூட்டமைப்பின் முதலாவது கூட்டத்தைக் கூட்டியவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்.
சமுதித்த: பிரபாகரன்தான் தமிழ் தேசியக் கூட்ட மைப்பை உருவாக்குகிறார். அதில் சம்பந்தன் அவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
சமுதித்த: நீங்கள் சொல்ல வருவது விடுதலைப் புலிகளின் தேவைகளுக்காக தமிழ் தேசியக்கூட்டமைப்பு உருவாகவில்லை என்றா?
சமுதித்த: தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவான போது 7 கட்சிகள் இருந்தன. இப்போது இருப்பது மூன்று மட்டுமே. புளொட் – டெலோ மற்றும் தமிழரசுக் கட்சி மட்டுமே இப்போது இருக்கின்றன.
சமுதித்த: ஆனந்தசங்கரி அவர்களும் இந்தக் கட்சியில் இருந்தார்கள். பாசிசவாதிகளோடு என்னால் தொடர்ந்து இருக்க முடியாது என்றே அவர் வெளியே சென்றார்.
சமுதித்த: விக்னேஸ்வரன் அவர்கள் வெளியேறி இருக்கிறார்கள். அனந்தி சசிதரன் அவர்கள் வெளியேறி இருக்கிறார்கள். அப்படி வெளியேறிய அனைவரும் உங்கள் மேல்தான் குற்றம் சுமத்துகிறார்கள்.
சமுதித்த: அவர்கள், உங்கள் கட்சியை ஐக்கிய தேசியக் கட்சியின் வாலில் தொங்க வைக்க முயற்சிக்கிறீர்கள் என்று சொல்கிறார்கள்.
சமுதித்த: சரியாக சொல்லுங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உண்மையான தலைவர் எம் ஏ சுமந்திரனா? அல்லது சம்பந்தனா?
சமுதித்த : சமஷ்டிஎன்பது இன்னொரு நாடு. சமஷ்டி என்றதும் நாடு பிரிந்தது என்றுதான் அர்த்தம்?
சமுதித்த – எம்.ஏ.சுமந்திரன் இனவாதியா?
இந்கக் கேள்விகளும் இதுபோன்ற கேள்விகளும் சுமந்திரனை ஒரு புலி முகவராகவும் இனவாதியாகவும் காட்ட கேட்கப்பட்ட கேள்விகளாகும்.
ஆனால் சர்ச்சைக்கு உள்ளான கேள்வி – பதில் பின்வருமாற அமைந்திருந்தது.
சமுதித்த: நீங்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் ஆயுதப் போராட்டத்தை ஏற்றுக் கொள்கிறீர்களா?
சுமந்திரன்: இல்லை. நான் ஏற்றுக் கொள்ளவில்லை.
சமுதித்த: ஒரு போதும் ஏற்றுக் கொள்ளவில்லை
சுமந்திரன்: நான் இதை யாழ்ப்பாணத்திலும் சொல்லுகிறேன். ஏனைய பிரதேசங்களிலும் இதையே சொல்கிறேன். அதனால் எனக்கு எதிர்ப்புகள் இருக்கின்றன. அவர் எங்களுக்காகத்தானே போராடினார்கள், ஏன் ஏற்றுக் கொள்கிறீர்கள் இல்லை என்று என்னோடு முரண்படுகிறார்கள். அதற்கு காரணம் நான் ஆயுதப்போராட்டம் ஒன்றை ஒருபோதும் ஆதரிப்பவன் அல்லன் என்பதுதான்.
இந்த இரண்டு கேள்விகளையும் அதற்கான பதில்களையும் படித்து விட்டுத்தான் சுமந்திரன் வி.புலிகளைக் கொச்சைப்படுத்திவிட்டார், ஆயுதப் போராட்டத்தை அவமதித்துவிட்டார் எனப் பலர் சன்னதம் ஆடினார்கள்.ஒன்று இந்த நேர்காணல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்களோடு நடாத்தப்பட்ட கேள்விகளாகும். தமிழ் அரசுக் கட்சியின் அல்லது தமிழ்த் தேசியக் கட்சியின் பேச்சாளர் என்ற முறையில் சுமந்திரன் அறிமுகப்படுத்தப் படவில்லை.
நான் ஆயுதப்போராட்டம் ஒன்றை ஒருபோதும் ஆதரிப்பவன் அல்லன் என்பதுதான் சுமந்திரனின் நீண்டகால நிலைப்பாடு. அது அவரது தனிப்பட்ட கருத்துரிமை. போராட்டம் தவறு என்று அவர் சொல்லவில்லை. வி.புலிகளின் தியாகங்களை கொச்சைப் படுத்த முடியாது. கொச்சைப் படுத்தக் கூடாது. அவர்கள் தங்கள் உயிர்களைத் தங்களுக்காக அல்ல எங்களுக்குக்காக தியாகம் செய்திருக்கிறாகள். அதனை நான் மதிக்கிறேன். ஆனால் வாக்குப் பெறுவதற்காக பயன்படுத்த மாட்டேன்.
தமிழ் அரசுக் கட்சியின் நீண்டகால வரலாற்றில் எந்தச் சந்தர்ப்பத்திலும் வன்முறையை ஆதரித்தது கிடையாது. 1956 இல் தமிழ் அரசுக் கட்சித் தலைவர்கள், தொண்டர்கள் மீது சிங்களக் காடையர் தாக்குதல் நடத்தியபோது யாரும் திருப்பித் தாக்கவில்லை. தந்தை செல்வநாயகம் தமிழர்களது போராட்டங்கள் அறவழியில், அகிம்சைக் கோட்பாட்டுக்கு அமைய இருக்க வேண்டும் என்று சொன்னார். அதன் காரணமாகவே அவர் "ஈழத்துக் காந்தி" எனப் போற்றப்பட்டார்.
சுமந்திரனின் சிங்கள நேர்காணலை படித்துப் பார்த்துவிட்டு சம்பந்தன் என்ன சொன்னார்?
சுமந்திரன் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் (forthright and frank) செயற்பட்டுள்ளார் எனச் சொன்னார்.
"அகிம்சை வழியில் பற்றுறுதிகொண்டிருந்த தமிழ்த் தலைவர் எஸ்.ஜே.வி.செல்வநாயகத்துடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைகளையும், ஒப்பந்தங்களையும் பெரும்பான்மை இனத் தலைவர்கள் அமுல்படுத்தத் தவறிமையே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் உருவாவதற்கு வழிவகுத்தது. 2009 ஆம் ஆண்டுவரை நீடித்த ஆயுதப் போராட்டக் காலத்திலும்கூட அமைதிவழி தமிழர் போராட்டம் தொடர்ந்தது.
நீதிமற்றும் சமத்துவத்தின் அடிப்படையில் எதிர்காலம் எவ்வாறு அனைத்து மக்களுக்கும் ஒளிமயமானதாக அமையக்கூடும் என்பதை இந்நாட்டு மக்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.நீதியானதும் ஏற்றுக்கொள்ளத் தக்கதுமான தீர்வொன்றையே தனது இறுதியான ஆர்வமாகக் கொண்டுள்ள சுமந்திரன் அந்தக் கண்ணோட்டத்திலிருந்தே வினாக்களுக்கு விடையளித்துள்ளார். சிலவிடயங்கள் மீது அவர் தனதுசொந்தக் கருத்துக்களையும் வெளியிட்டுள்ளார்" என இரா சம்பந்தன் தனது அறிக்கையல் குறிப்பிட்டுள்ளார். (https://www.colombotelegraph.com/index.php/sampanthan-defends-sumanthiran-says-sumanthiran-has-been-frank-and-forthright/)
இருபத்தேழு ஆண்டு கால அகிம்சைப் போராட்டம் வெற்றியளிக்கவில்லை. 26 ஆண்டு கால ஆயுதப் போராட்டமும் வெற்றியில் முடியவில்லை. எஞ்சியிருப்பது இராதந்திரப் போராட்டம். அதனை சம்பந்தன் – சுமந்திரன் கையில் எடுத்துள்ளார்கள்! நக்கீரன் newsuthanthiran.com may 28 ,2020
உரிமையா, அபிவிருத்தியா? தமிழர் நலன்காப்பது எந்தவழி அரசியல்?
07 06 2020
உரிமையா, அபிவிருத்தியா? தமிழர் நலன்காப்பது எந்தவழி அரசியல்?
அடுத்துவரும் ஓகஸ்ட் மாதத்தில், நாடாளுமன்றப் பொதுத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்குள், நாட்டுமக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்.மூவினங்கள் வாழும் இந்த நாட்டில், நாடாளுமன்றத் தேர்தல் குறித்த எதிர்பார்ப்புகளும் சிந்தனைகளும் அபிலாஷைகளும், ஓரினத்தைப்போல் மற்றைய இனத்துக்குக் கிடையாது. ஒவ்வொரு இனத்தினுடைய, தேர்தல் குறித்த அணுகுமுறைகள், வேறுவேறானவை.
சிங்கள மக்கள் தமது நாடாளுமன்றப் பிரதிநிதிகளைத் தெரிவுசெய்வதன் நோக்கத்துக்கும், முஸ்லிம் மக்கள் தமது நாடாளுமன்றப் பிரதிநிதிகளைத் தெரிவுசெய்யும் நோக்கத்துக்கும் தமிழ் மக்கள் தமது நாடாளுமன்றப் பிரதிநிதிகளைத் தெரிவு செய்யும் அபிலாஷைகளுக்கும் இடையில் பாரிய வேறுபாடுகள், இடைவெளிகள் காணப்படுகின்றன.இலங்கையில், ஏனைய இனங்களின் நாடாளுமன்றப் பிரதிநிதிகளுக்கு இல்லாத மேலதிக பொறுப்புகளும் கடமைகளும் அவற்றை நிறைவேற்றும் பக்குவமும் துடிப்பும் தூரநோக்குப் பார்வையும் தமிழ் நாடாளுமன்றப் பிரதிநிதிகளிடத்தில் பெருமளவு தேவைப்படுகின்றன. இத்தகையோரையே தெரிவு செய்ய வேண்டிய தேவை, தமிழினத்தின் முன்னால் குவிந்துபோய்க்கிடக்கின்றன.
தமிழ் நாடாளுமன்றப் பிரதிநிதிகள், தமது பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதுடன், தமக்கு வாக்களித்த மக்களின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொள்வதற்கு அப்பால், தனது இனத்தையும் நிலத்தையும் மொழியையும் பாதுகாக்க வேண்டிய மாபெரும் வரலாற்றுக் கடமையையும் கொண்டிருக்கிறார்கள்; தாங்கியிருக்கிறார்கள்.கடந்த காலங்களில், தமிழ்மக்கள், தமது அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்குத் தகுதியானவர் இவர்தான் என்ற கனவுடன் தெரிவுசெய்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் எத்தனைபேர், தமது மனச்சாட்சிக்குத் துரோகமிழைக்காமல் செயற்பட்டிருந்தார்கள் என்பது, தமிழ்த் தேசியத்தின் மனச்சாட்சிக்கு நன்கு தெரியும்.
முஸ்லிம் மக்களைப் பொறுத்தவரையில், அவர்களுடைய தொழில், நிலம், இருப்பு ஆகியவை பாதுகாக்கப்படுவதே முக்கியமாகும். பேசும் மொழியால் அன்றி, மதத்தாலேயே அவர்களது இனத்துவ அடையாளம் வெளிப்படுத்தப்படுகின்றது; பாதுகாக்கப்படுகின்றது. அவர்கள், சிங்கள மொழி பேசுவோராக இருந்தாலும், இஸ்லாமிய மதத்தைப் பின்பற்றுபவராக இருந்தால், அவர் முஸ்லிம் இனமாகவே அடையாளப்படுத்தப்படுவார். தமிழ் மொழி பேசுவதால்தான், ஒருவர் முஸ்லிமாக இனத்துவ அடையாளப்படுத்தப்படுகின்றார் என்ற வரையறையோ தாற்பரியமோ கிடையாது. முஸ்லிம்களை, மொழிவழி இனக்குழுமமாகப் பார்க்கும் வரலாற்றுப் பாரம்பரியம், இங்கு இல்லை என்பதுவே யதார்த்தமாகும்.
எனவே, முஸ்லிம் இனத்தைப் பொறுத்தவரையில், அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்கும் ஆக்கிரமிப்புகளுக்கும் தீர்வு காண்பதற்கு, ஆளும் பெரும்பான்மையினக் கட்சியுடன் இணைந்து பயணிப்பது, ஒத்துப்போவதே அனுகூலமானது எனச் சிந்திக்கின்றார்கள். ஒரு பிரச்சினை எழுகின்றபோது, வெளியில் இருந்து பேசுவதைவிட, அரசாங்கத்துக்குள் இருந்து பேசுவது, அனுகூலமானது என்பது அவர்களது நிலைப்பாடு; இதில் தவறில்லை.சிங்கள மொழிவழியில் கல்வி கற்று, சிங்கள மொழியையே வீட்டிலும் வெளியிலும் உரையாடி, சிங்கள மொழியிலேயே பள்ளிவாசலில் தொழுகை செய்தாலும், அவர்கள் முஸ்லிம் இனஅடையாளத்தைக் கொண்டவர்களாகவே இருப்பார்கள். எனவே, அவர்கள் அரசுடன் கலந்து பயணிப்பதன் மூலம், தமது இனத்துவ அடையாளங்களை இழந்து விடுவார்கள் என்று அச்சப்படத் தேவையில்லை. அவர்கள், சிங்கள மக்களுடன் இரண்டறக் கலந்தாலும், முஸ்லிம் என்ற இன அடையாளத்துடன் வாழமுடியும்.
ஆனால், தமிழர்களின் நிலை அவ்வாறில்லை. தமிழர்களின் இன அடையாளம், மதம் சார்ந்ததில்லை; மொழி சார்ந்தது. தமிழ் மொழி பேசுவதன் ஊடாகவே, தமிழர், தமது இனத்துவ அடையாளத்தை முன்னிலைப்படுத்துகின்றார்கள்.தமிழர் ஒருவர், சிங்கள மொழி வழியில் கல்விகற்று, சிங்கள மொழியையே வீட்டுமொழியாகப் பேசி வாழ்ந்தால், அவரின் அடுத்த தலைமுறை, எந்த மொழிபேசும் ஒருவராக இருப்பார்? அதன்போது, அவர் தமிழர் என்ற இன அடையாளத்தை இழந்து விடுகின்றார். தற்போது, எந்த இன அடையாளத்தோடு வாழ்கின்றாரோ, அதுவே அவரது இன அடையாளம் ஆகின்றது.
எனவே, இனத்துவ அடையாளம் பாதுகாக்கப்பட்டால்த்தான், அந்த இனம் நின்று நிலைக்கும்.வடக்கு-கிழக்கு பிரதேசங்களுக்கு வெளியில் வாழ்ந்த தமிழர்கள், தமது இனத்தின் அடையாளத்தைக் காப்பாற்றத் தவறியதால் அல்லது, இனத்துவ அடையாளத்தை வெளிப்படுத்துவதைப் பல்வேறு வழிகளிலும் தடுக்கப்பட்டதால், தமிழர்கள் பல இலட்சம் பேரைத் தமது மொத்த சனத்தொகைக் கணிப்பிலிருந்து இழந்துவிட்டார்கள்.வடக்கு, கிழக்கு தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் வாழ்ந்த தமிழர்களின் வரலாறு மறக்கடிக்கப்பட்டுள்ளது என்பது உண்மையே. குறிப்பாக, குருநாகல், கண்டி, ஹம்பாந்தோட்டை, களுத்துறை உட்பட, மேற்குக் கடற்கரையோரப் பிரதேசங்களான புத்தளம், சிலாபம் போன்ற பிரதேசங்களில் வாழ்ந்த தமிழ் மக்களில், பல இலட்சம் பேர், சிங்களவர்களாக இனமாற்றம் செய்யப்பட்டார்கள் என்ற பதிவுகள், பல இடங்களில் காணப்படுகின்றன. இவர்கள் தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும்.
புத்தளம்-சிலாபம் மறைமாவட்டத்தைத் மய்யமாகக் கொண்ட கத்தோலிக்க தேவாலயங்கள், பாடசாலைகள் ஊடாக, படிப்படியாக சிங்கள மயமாக்கல் இடம்பெற்றது. ஆனால், இந்தப் பிரதேசத்தில் உள்ள இந்துக் கிராமங்களான உடப்பு, முன்னேஸ்வரம் ஆகியவை, தமிழர்கள் என்ற மொழி அடையாளத்தை இன்றுவரை பல இடர்பாடுகள், இன்னல்களுக்கு மத்தியில் பேணி வருகின்றார்கள்.கொழும்பின் வடக்கே, சிலாபம் வரையுள்ள கடற்கரைப் பிரதேசங்களில் செறிவாக வாழ்ந்த மக்கள், போர்த்துக்கேயரால் கத்தோலிக்கர்களாக மதமாற்றம் செய்யப்பட்டார்கள். போர்த்துக்கேய காணிப்பதிவுப் பத்திரங்களில் காணப்படும் விவரங்களின்படி, மதமாற்றத்துக்கு முன்னர், இவர்களுடைய பெயர்கள், இந்துமதத்தைத் சார்ந்தவையாகக் காணப்பட்டுள்ளன.
1915ஆம் ஆண்டு மே 28இல், சிங்களவருக்கும் முஸ்லிம்களுக்கும் இனக்கலவரம் இடம்பெற்றது. இதன்போது, முஸ்லிம்களின் பெறுமதியான பல சொத்துகள் அழிக்கப்பட்டன. அழிக்கப்பட்ட சொத்துகளுக்கு நிவாரணம் வழங்கும் வகையில், பிரித்தானிய அரசாங்கம் சிங்களவர் மீது, தண்டம் விதித்தது. இதன்போது, கொழும்பின் வடக்கே மேற்குக் கடற்கரையோரப் பகுதிகளில் புத்தளம் வரை வாழ்ந்த மக்கள், தாங்கள் சிங்களவர் இல்லை என்றும், தாங்கள் தமிழர்கள் என்றும் பிரித்தானிய அரசாங்கத்திடம் விண்ணப்பம் செய்தார்கள். இந்த விண்ணப்பம், இன்றும் பிரித்தானிய அரசாங்கத்தின் ஆவணக் காப்பகத்தில் காணப்படுவதாக அறியமுடிகிறது.
இவர்கள் தமிழர்களாக இருந்ததால், எத்தகைய ஆபத்துகளை, அழிவுகளை எதிர்கொண்டார்கள் என்பது குறித்த பதிவுகள் எவையும் கிடைக்கப்பெறவில்லை. எனவே, எத்தகைய ஆபத்துகள், அச்சுறுத்தல்களை எதிர்கொண்டதால், அவர்கள் தங்களது அரச பதிவுகளில், 'சிங்களவர்' என்று பதிவுசெய்து கொள்கின்றார்கள் என்பதை, இலக்கையின் இனநெருக்கடி வரலாற்றை அறிந்து கொண்டவர்களால் இலகுவில் புரிந்துகொள்ள முடியும்.
இலங்கை முழுவதையும் பௌத்த சிங்கள நாடாக மாற்ற வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் செயற்படும் பேரினவாதக் குழுக்களையும் இவர்களின் விருப்பு வெறுப்புகள், அபிலாஷைகளுக்காகவே செயற்படுவதற்காக, அரசியல் அதிகாரத்துக்கு மாறிமாறிவரும் இரண்டு பிரதான அரசியல் கட்சிகளையும் யார் தடுத்தாலும் குறித்த அச்சிலேயே சுழல்வார்கள்.எனவே, தமிழர்கள் தமது இனம் அழிவதைத் தடுக்க, அவர்கள் போராடியே ஆகவேண்டும். அத்தகைய போராட்டம், எத்தகைய தன்மையானது, எந்தச் செல்நெறியினூடானது என்பதே தமிழர்கள் முன்னுள்ள மிகப்பெரிய வினா?
எனவே, தமிழர்கள் முன்னுள்ள சவால்களை எதிர்கொண்டு, முன்கொண்டு செல்லக்கூடிய தமிழ்க்கட்சி எது, அரசியல்வாதி யார் என்பது குறித்துச் சிந்தித்துத் தீர்க்கமான முடிவுகளைத் தமிழ்மக்கள் எடுத்தல் வேண்டும். அது, ஒன்றுபட்டதும், ஒற்றுமைப்பட்டதுமாக இருக்கவேண்டும்.தமிழ்த் தேசிய அரசியல், தொடர்ந்தும் அபிவிருத்தி அரசியலிலா, உரிமை அரசியலிலா பயணிக்க வேண்டும் என்ற குழப்பம் தமிழ் மக்களிடம் காணப்படுகின்றது. போராடிப்போராடி நாம் பெற்றுக் கொண்டது என்ன என்று கேள்வி கேட்பவர்கள், இனஅழிப்பு, ஆக்கிரமிப்புகளை எதிர்த்துப் போராடாமல் விட்டிருந்தால், இன்று, இலங்கையில் ஒரு தமிழ் எழுத்தைக் கூடக் காணமுடியாத நிலை ஏற்பட்டிருக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் கொள்ளத் தேவையில்லை.
'தமிழர்களுக்கு இப்போது எந்தப் பிரச்சினைகளும் கிடையாது; அவர்கள் எம்முடன் இணைந்து, நாட்டை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்கிறார்கள்' என்று வெளிநாடுகளுக்குத் தேனொழுகச் சொல்லிக் கொண்டே, இலங்கையை முழுமையாகச் சிங்கள-பௌத்த நாடாக மாற்றும் கைங்கரியம் நிறைவேற்றப்பட்டிருக்கும்.எனவே, தமிழர்களின் எதிர்கால அரசியல், தொடர்ந்தும் உரிமைக்காகக் குரல் கொடுக்கும், இனஅடையாளங்களைப் பாதுகாப்பதற்கான வன்முறையற்ற போராட்ட அரசியலாகவே இருக்க வேண்டும் என்பது கடந்த கால வரலாறு கற்றுத்தரும் பாடமாகும்.இராணுவ நெருக்கடிச் சூழ்நிலைகளுக்கு மத்தியிலும், அஹிம்சாவாத வழிமுறைகள் ஊடாக, மக்கள் எவ்வாறு எதிர்ப்புப் போராட்டங்களை நடத்தினார்கள் என்பதற்கு, போலந்து மக்களின் வெற்றிகரமான ஒருமைப்பாட்டு போராட்டம், இன்றைய நிலையில் தமிழர்களுக்கு மிகச் சிறந்த முன்னுதாரணம் ஆகும். (tamilmirror,lk june 6 2020 )