நீட் தேர்வுக்கு முன்னும் பின்னும் நிகழ்ந்த மாற்றங்கள் என்ன? ஓர் பார்வை...

31 03 2025

நீட் தேர்வுக்கு முன்னும் பின்னும் நிகழ்ந்த மாற்றங்கள் என்ன? ஓர் பார்வை...

நீட் தேர்வு பாதிப்பு தொடர்பாக ஆய்ந்தறிய ஓய்வு பெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை வெளியாகியுள்ளது. இதில் நீட் தேர்வுக்கு முன்னும், பின்னும் மாணவர் சேர்க்கை எவ்வாறு இருந்தது என்ற புள்ளி விவரங்கள் தரப்பட்டுள்ளன. அதன்படி நீட் தேர்வுக்குப் பின்னர் தமிழகத்தில் மருத்துவப்படிப்பில் சேரும் மாணவர்களில் அதிகமானோர் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் படித்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

நீட் தேர்வுக்கு முன்:

2013-14ஆம் கல்வி ஆண்டில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 3267 மாணவர்கள் சேர்ந்தனர். இவர்களில் மாநில அரசின் பாடத்திட்டத்தின் கீழ் படித்தவர்கள் 3251 பேர். சிபிஎஸ்இ மாணவர்கள் 4 பேர். பிறர் 12 பேர், அடுத்தடுத்த ஆண்டுகளிலும் இதே நிலை நீடிக்க, 2014-15 கல்வி ஆண்டைப் பொருத்தவரையில் மருத்துவப்படிப்பில் சேர்ந்த மாணவர்கள் 3147 பேர் இவர்களில் மாநில அரசின் பாடத்திட்டத்தின் கீழ் படித்தவர்கள் 3,140பேர், சிபிஎஸ்இ மாணவர்கள் 2 பேர், பிறர் 5பேர். 

2015-16ஆம் கல்வி ஆண்டில் மருத்துவப்படிப்பில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை முந்தைய ஆண்டை விட சற்று குறைந்தது. மொத்தம் மருத்துவப்படிப்பில் சேர்ந்தோர் 3,015 பேர். இவர்களில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் படித்தவர்கள் 2,996பேர். சிபிஎஸ்இ மாணவர்கள் 2பேர் பிறர் 17 பேர்.

2016-17ஆம் கல்வி ஆண்டில் மருத்துவப்படிப்பில் சேர்ந்தோரின் எண்ணிக்கை முந்தைய ஆண்டுகளை விட சற்று அதிகரித்தது. மாநில அரசுப் பாடத்திட்டத்தின் கீழ் பயின்றவர்கள் 3,544 பேரும், சிபிஎஸ்இ மாணவர்கள் 35 பேரும், பிறர் 29 பேரும் என அந்த ஆண்டில் 3,608 மாணவர்கள் மருத்துவப்படிப்பில் சேர்ந்தனர்.

நீட் தேர்வுக்குப் பின்:

நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்ட பின்னர் 2017-18ஆம் ஆண்டில் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் மருத்துவம் படிக்க சேர்ந்தோர்களில் சிபிஎஸ்இ மாணவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்தது. 2017-18ஆம் ஆண்டில் ஆயிரத்து 113ஆக அதிகரித்தது. அதே நேரத்தில் முன்னர் மாநில பாடத்திட்டத்தின் கீழ் படித்த 3000 அதிகமானோர் மருத்துவப்படிப்பில் சேர்ந்து வந்த நிலையில், அவர்களின் எண்ணிக்கையானது 2,303ஆகக் குறைந்தது.

அதற்கு அடுத்த 2018-19ஆம் கல்வி ஆண்டில் மருத்துவப்படிப்பில் சேர்ந்தோர் எண்ணிக்கை 3,618ஆகும். இதில் மாநிலப்பாடத்திட்டத்தின் கீழ் படித்தோர் 2626 பேரும் சிபிஎஸ்இ மாணவர்கள் 894 பேரும், பிறர் 118 பேரும் அடங்குவர். 

2019-20ஆம் கல்வி ஆண்டில் மருத்துவப்படிப்பில் சேர்ந்தோரின் எண்ணிக்கை 4ஆயிரத்தைத் தாண்டியது. மாநிலப்பாடத்திட்டத்தின் கீழ் படித்த 2,762 பேர், சிபிஎஸ்இ மாணவர்கள் 1,368 பேர், பிற கல்வித் திட்டத்தின் கீழ் பயின்ற மாணவர்கள் 72பேர் என மொத்தம் 4,202 மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்ந்தனர்

puthiyathalaimurai.com 21 sep 2021