புதிய அரசியல் சாசனத்திற்கான சரித்திர பயணம் (04)

28 03 2017

புதிய அரசியல் சாசனத்திற்கான சரித்திர பயணம் (04)

( ஆர். ராம்)

குறித்த நீதி­மன்­றத்­திற்கு நீதி­ப­தி­களை தவி­ரவும் அர­சி­ய­ல­மைப்பு நிபு­ணத்­துவம் வாய்ந்­த­வர்களை குறித்த அந்த நீதி­மன்­றத்தின் நீதி­ப­தி­க­ளாக ஐந்து வரு­ட­கா­லத்­திற்கு மாத்­திரம் உள்­ள­டக்­கி­ய­தாக ஏற்­பா­டு­களை செய்­வது சிறந்­த­தாகும்.

கேள்வி:- அர­சி­ய­ல­மைப்பு நீதி­மன்றம் உரு­வாக்­கப்­படும் பட்­சத்தில் உயர் நீதி­மன்­றத்தின் மீயுயர் தன்மை இழக்­கப்­ப­டு­கின்­ற­தல்­லவா? 

பதில்:- ஆம். மீயுயர் தன்மை சிறிது வலு­வி­ழக்­கப்­படும். ஆனாலும் தற்­போ­தி­ருக்­கின்ற நீதி­மன்­றக்­கட்­ட­மைப்பின் பிர­காரம் உயர்­நீ­தி­மன்­றமே உயர்ந்­தது. அர­சி­ய­ல­மைப்பு பற்­றிய பொருள்­கோ­ட­லுக்­கான அவ­சியம் ஏற்­பட்டால் அதனை சீர் செய்யும் நீதி­மன்ற நியா­யா­திக்கம் அர­சி­ய­ல­மைப்பு நீதி­மன்­றத்­திற்கு மட்­டுமே இருக்கும். ஆரம்­பத்தில் அர­சி­ய­ல­மைப்பு நீதி­மன்றம் தொடர்பில் முன்­மொ­ழி­கின்­ற­போது நீதி­ப­திகள் கூட விரும்­பி­யி­ருக்­கவில்லை. இருப்­பினும் அது தொடர்­பாக உப­கு­ழுவில் கலந்­து­ரை­யா­டப்­பட்­ட­தை­ய­டுத்து அவர்கள் ஏற்­றுக்­கொண்­டுள்­ளார்கள். ஆகவே இந்த முன்­மொ­ழிவு நடை­மு­றைக்கு வரு­கின்­ற­போது ஏனைய நாடு­களின் அனு­ப­வங்­க­ளையும் கருத்­திற்­கொண்டே நடை­மு­றைப்­ப­டுத்­துவோம்.

கேள்வி:- நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறைமை மாற்­றப்­பட்டு பாரா­ளு­மன்­றத்­திற்­கான அதி­காரம் ஏற்­ப­டுத்­தப்­ப­டு­கின்­ற­போது ஜனா­தி­பதி பதவி வெறு­மனே கௌர­வப்­ப­த­வி­யா­கி­வி­டுமே?
பதில்:-ஆம்.பெய­ர­ள­வி­லேயே ஜனா­தி­பதி என்­கின்ற நிலைமை தான் ஏற்­படும். எமது நாட்டில் 1978ஆம் ஆண்டு வரையில் இருந்த நிலை­மை­க்கே மீண்டும் செல்­வ­தா­க இருக்கும். வர­லாற்றை எடுத்­துப்­பார்க்­கையில் நிறை­ வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறை­மை­யா­னது இந்த நாட்டில் எதேச்சா­தி­கா­ரத்­திற்கு தான் வழி­கோ­லி­யி­ருக்­கின்­றது. முத­லா­வது நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­ப­தி­யான ஜே.ஆர்.ஜெய­வர்த்தன முதல் இறு­தி­யாக மஹிந்த ராஜ­பக் ஷ வரையில் அதி­கார துஷ்­பி­ர­யோ­கத்தை தான் மேற்­கொண்­டி­ருக்­கின்­றார்கள். இதில் விதி­வி­லக்­காக சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்­கவை சொல்ல முடியும்.

அதன் பிர­காரம் நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறைமை மாற்­றப்­பட்டு பாரா­ளு­மன்­றத்­திற்கு பொறுப்­புக்­கூ­றக்­கூ­டிய நாட்டின் தலைவர் இருக்­க­வேண்­டு­மென்­பதே பலரின் கருத்­தா­கின்­றது. அது­வொ­ரு­பு­ற­மி­ருக்­கையில், எமக்­குள்ள பிர­தான பிரச்­சினை மாகாண ஆளு­நர்களின் அதி­கா­ரங்கள். தற்­போது இருக்­கின்ற அர­சி­ய­ல­மைப்பின் பிர­காரம் மக்­களால் நேர­டி­யாக தெரிவு செய்­யப்­படும் ஜனா­தி­ப­திக்கு காணப்­படும் நிறை­வேற்று அதி­கா­ரத்­தினால் அவர் தன்­னு­டைய முக­வ­ராக உள்ள மாகாண ஆளு­நர்­க­ளுக்கு அதி­க­ள­வான அதி­கா­ரங்­களை வழங்க முடியும் என 13ஆவது திருத்­தச்­சட்­டத்­திற்கு வழங்­கப்­பட்ட பொருள்­கோ­டலில் நீதி­மன்றம் குறிப்­பிட்­டுள்­ளது.

ஆகவே நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறை நீக்­கப்­ப­டு­கின்­ற­போது மாகாண ஆளு­நர்­க­ளுக்­கான அதி­காரம் நீக்­கப்­ப­டு­வ­தற்கும் வழி­யேற்­படும். மாகா­ணங்­களைப் பொறுத்­த­வ­ரையில் ஆளு­நர்கள் பெய­ர­ள­விலே இருப்­ப­தோடு மக்­களால் தெரிவு செய்­யப்­ப­டு­ப­வர்­க­ளி­டத்தில் தான் மாகாண நிறை­வேற்று அதி­கா­ரங்கள் வழங்­கப்­ப­ட­வேண்டும். அவ்­வாறு செய்­கின்­ற­போது தான் அதி­கா­ரங்கள் மக்கள் கையிலே பகி­ரப்­பட்­ட­தாக இருக்கும்.

கேள்வி:மாகா­ணங்­க­ளுக்கு பொலிஸ் அதி­கா­ரத்தை உறுதி செய்­வ­தற்­காக செய்­யப்­பட்­டுள்ள முன்­மொ­ழி­வு­களின் பிர­காரம் அர­சியல் பிர­தி­நி­தி­யொ­ரு­வ­ரி­டத்தில்(மாகாண முத­ல­மைச்­ச­ரி­டத்தில்) பொலிஸ் தரப்பை கையாளும் அதி­காரம் நேர­டி­யாக கைய­ளிக்­கப்­ப­டு­கின்­றதே?
பதில்:- அர­சி­ய­ல­மைப்பில் 13ஆவது திருத் தம் செய்­யப்­பட்­ட­போது இருந்த நிலைமை 17ஆவது திருத்தம் மேற்­கொள்­ளப்­பட்ட பின்னர் மாறி­யி­ருந்­தது. பொலி­ஸாரின் சுயா­தீன தன்மை உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டது. 18ஆம் திருத்­தத்தின் ஊடாக மீண்டும் எடுத்­துக்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தது. இருப்­பினும் 19ஆம் திருத்­தத்தின் ஊடாக மீண்டும் கொண்டு வரப்­பட்­டுள்­ளது.

பொலிஸ் பிரிவு சுயா­தீ­ன­மாக இயங்க வேண்­டு­மென்­பது நாடு பூரா­கவும் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டுள்­ளது. அவ்­வா­றி­ருக்­கையில் மாகா­ணத்தில் பொலிஸ் அதி­கா­ரத்தை கொடுக்­கின்­ற­போது அங்கே அர­சியல் தலை­யீ­டுகள் ஏற்­ப­டு­வதை யாரும் விரும்­பாத விடயம்.

மத்­தியில் எவ்­வாறு சுயா­தீன பொலிஸ் ஆணைக்­குழு செயற்­ப­டு­கின்­றதோ அதே­போன்று மாகாண பொலிஸ் ஆணைக்­கு­ழுக்­க­ளுக்கும் சுயா­தீன தன்மை வழங்­கப்­பட்டு அதன் கீழே தான் பொலிஸ் தரப்பும் தமது செயற்­பா­டு­களை முன்­னெ­டுப்­ப­தற்­கான முன்­மொ­ழிவே உப­கு­ழுவால் பரிந்­துரை செய்­யப்­பட்­டுள்­ளது. இது 13ஆவது சரத் தில் காணப்­ப­டா­ததும் அதே­நேரம் பொலிஸின் சுயா­தீ­னத்­தையும் உறு­தி­செய்வது புதிய விடய­மா­கின்­றது.

கேள்வி:-காணி அதி­கா­ரங்கள் வழங்­கப்­ப­டு­வது குறித்து எவ்­வா­றான முன்­னேற்றம் காணப்­ப­டு­கின்­றது?
பதில்:- காணி அதி­கா­ரங்கள் சம்­பந்­த­மான விட­யங்­களை நேர­டி­யாக வழி­ந­டத்தல் குழுவே கையா­ளு­கின்­றது. அது குறித்து ஆரா­யப்­பட்­டுள்­ள­போதும் இறுதி முடிவு எடுக்­கப்­ப­ட­வில்லை. 2000ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா அம்­மை­யாரால் புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான நகல் வரை­பொன்று பாரா­ளு­மன்­றத்தில் முன்­வைக்­கப்­பட்­டது.

அந்த வரைபில் எவ்­வாறு காணி அதி­கா­ரங்கள் மாகா­ணங்­க­ளுக்கு பகி­ரப்­ப­டலாம் என்­பது கூறப்­பட்­டுள்­ளது. அத­னைத்­தொ­டர்ந்து மஹிந்த ராஜ­ப­க் ஷவின் காலத்தில் சர்வ கட்­சி­களின் திஸ்ஸ விதா­ரண அறிக்­கை­யிலும் காணி அதி­கா­ரங்கள் பற்றி அறிக்கை உண்டு. ஆகவே அவற்­றை­யொட்­டி­ய­தா­கவே காணி அதி­கா­ரங்கள் பகி­ரப்­ப­டு­வ­தற்­கான இறுதி வடிவம் அமையும் என்ற நம்­பிக்கை உள்­ளது. குறிப்­பாக மாகா­ணத்தின் அனு­ம­தி­யின்றி காணி­களை மத்தி எவ­ருக்கும் வழங்­கலாம் என்ற தற்­போ­துள்ள முறைமை நிச்­ச­ய­மாக தடுக்­கப்­படும்.

கேள்வி:- மத்­திக்கும் மாகா­ணத்­திற்கும் இடையில் அதி­கார எல்லை தொடர்­பாக குழப்­பங்கள் ஏற்­ப­டு­வ­தற்கு கார­ண­மா­க­வி­ருக்கும் ஒத்­தி­சைவு பட்­டியல் நீக்­கப்­ப­டுமா?
பதில்:- ஒத்­தி­சை­வுப்­பட்­டியல் நீக்­கப்­பட­ வேண்டும் என்­பதே அனை­வ­ரி­னதும் ஏகோ­பித்த நிலைப்­பா­டாக இருக்­கின்­றது. குறிப்­பாக பொது எதி­ர­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் கெஹ­லிய ரம்­புக்­வெல்ல கூட தனது அறிக்­கையில் ஒத்­தி­சை­வுப்­பட்­டியல் நீக்­கப்­ப­ட­வேண்­டு­மென கோரி­யி­ருந்தார். இருப்­பினும் அந்த அறிக்­கையை அவர் மீளப்­பெற்­று­விட்டார். சந்­தி­ரி­காவின் வரைவு, திஸ்ஸ விதா­ரண அறிக்கை, தற்­போ­தைய உப­கு­ழுக்­களின் பரிந்­துரை அறிக்­கைகள் என எதிலும் ஒத்­தி­சைவு பட்­டியல் பற்றி குறிப்­பி­டப்­ப­ட­வில்லை.

தேசிய கொள்கை என்­பது அதி­கா­ரப்­ப­கிர்­வுக்கு தடங்­க­லான விட­ய­மாக உள்ளது என்பதை எமது அனு­ப­வத்தில் கண்­டி­ருக்­கின்றோம். இருப்­பினும் சில விட­யங்­களில் தேசிய கொள்கை அவ­சி­ய­மா­கின்­றது. தேசிய கொள்­கை­யா­னது துஷ்­பி­ர­யோகம் செய்­யப்­பட்­டி­ருந்­தாலும் கூட அத்­தி­யா­வ­சி­ய­மாக இருக்­கின்­றது. ஜேர்மனி போன்ற நாடு­களில் ஒத்­தி­சைவு பட்­டி­யலில் இருக்­கின்ற விட­யங்கள் தொடர்­பாகத் தான் தேசியக் கொள்கை இயற்­றப்­பட முடியும் என்­றொரு ஒழுங்கு முறைமை உள்­ளது.
அவ்­வா­றான சில தேவைப்­பா­டு­க­ளுக்­காக ஒரு ஒத்­தி­சைவு பட்­டி­யலை ஏற்­ப­டுத்­தினால் அது பாத­க­மில்லை என்ற சிந்­த­னை­ களும் உள்­ளன. ஆகவே ஒத்­தி­சைவு பட்­டியல் முழு­மை­யாக நீக்­கப்­ப­டுமா இல்­லையா என்­பதை தற்­போது கூற­மு­டி­யாது. ஆனால் ஒத்­தி­சைவு பட்­டியல் உரு­வாக்­கப்­ப­டு­மாக இருந்தால் நாடு பூரா­கவும் தேசிய கொள்கை ஒன்று காணப்­ப­ட­வேண்டும் என்ற அவ­சியம் காணப்­படும் பட்­சத்­தி­லேயே அதனை இணைத்­துக்­கொள்­வ­தற்கு இணங்­குவோம்.

கேள்வி:- ஒற்­றை­யாட்­சிக்குள் தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வைக் காண்­ப­தற்கு த.தே.கூ இணங்­கி­விட்­டதா? ஒற்­றை­யாட்சி சொற்­பதம் புதிய சாச­னத்­திலும் இருக்­குமா?
பதில்:- ஒற்­றை­யாட்­சிக்குள் தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வை காண்­ப­தற்கு தமிழ்த் தேசியக் கூட்­ட­மை­ப்பு இணங்கி விட்­ட­தாக சில அமைச்­சர்கள் கூறி­ய­போது அதனை உடனடியாக நாம் மறுத்­தி­ருக்­கின்றோம். அதன் பின்னர் அந்த அமைச்­சர்கள் இல்லை நீங்கள் எவ்­வாறு இணங்­கி­னீர்கள் என வாதி­டவும் இல்லை. நிரூ­பிக்­கவும் இல்லை. வழி­ந­டத்தல் குழுவில் ஒற்­றை­யாட்சி விடயம் சம்­பந்­த­மாக கலந்­து­ரை­யா­டப்­பட்­டது. அதன்­போது பிர­த­மரே தான் ஒற்­றை­யாட்­சிக்கு எதி­ரா­னவர் எனக் கூறி­யி­ருக்­கின்றார். பிர­த­மரின் அவ்­வா­றான கூற்றை முன்­வைப்­ப­தற்­கான கார­ணங்கள் வேறாக இருக்­கின்­றன.

ஒற்­றை­யாட்சி முறைமை உள்ள நாடொன்றில் சாதா­ரண சட்­ட­மொன்­றி­னா­லேயே நாட்டை பிரித்­துக்­கொ­டுக்க முடியும். கூட்­டாட்­சியால் அவ்­வாறு முடி­யாது என­பதே பிர­த­மரின் கூற்­றுக்­கான கார­ண­மாகும். நாட்டை பிள­வு­ப­டுத்தும் ஒற்­றை­யாட்­சி­யையா நீடிக்க வேண்­டு­மென கோரு­கின்­றீர்கள் எனவும் பிர­தமர் வழி­ந­டத்தல் குழுவில் கேள்­வி­யெ­ழுப்­பி­யி­ருந்தார். இதே ­க­ருத்­தையே தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப் பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளு­ட­னான சந்­திப்பின் போதும் பிர­தமர் கூறி­யி­ருந்தார்.

அச்­ச­ம­யத்தில் எமது பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஒருவர், நீங்கள் ஒற்­றை­யாட்­சியை எதிர்ப்­ப­தற்­கான காரணம் வேறு. நாங்கள் எதிர்ப்­ப­தற்­கான காரணம் வேறு எனச் சுட்­டிக்­காட்­டினார். அச்­ச­ம­யத்தில் பிர­தமர், நீங்கள் என்ன கார­ணத்­திற்­காக எதிர்த்­தாலும், நான் என்ன கார­ணத்­திற்­காக எதிர்த்­தாலும் நாங்கள் ஒற்­றை­யாட்­சிக்கு எதி­ரா­ன­வர்கள் என்று பதி­ல­ளித்­தி­ருந்தார். இவ்­வா­றி­ருக்­கையில் ஒற்­றை­யாட்சி என்ற சொற்­பி­ர­யோகம் குறித்து நாங்கள் தீர்க்­க­மாக பேச்­சு­வார்த்தை நடத்­தி­யி­ருக்­கின்றோம். ஏனென்றால் சிங்­கள மக்கள் மத்­தியில் இது­வ­ரையில் நடத்­தப்­பட்ட பல்­வேறு கருத்து அறியும் செயல்­வ­டி­வங்­களில் பெரும்­பான்­மை­யா­னவர்கள் ஒற்­றை­யாட்சி இருக்­க­வேண்டும் என்று கூறி­யி­ருக்­கின்­றார்கள்.

அவர்களிடத்தில் நீங்கள் எதற்­காக ஒற்­றை­யாட்­சியை எதிர்க்­கின்­றீர்கள் எனக் கேள்­வி­யெ­ழுப்­பு­கின்­ற­போது, நாடு பிரி­வ­டைந்­து­விடும் என்­பதால் தான் அவ்­வாறு கூறு­கின்றோம் எனவும் அந்த மக்கள் குறிப்­பிட்­டி­ருக்­கின்­றார்கள். சிங்­கள மொழியில் ஒற்­றை­யாட்சி என்­ப­தற்கு 'ஏக்­கிய ரஜய' என்ற சொல்லே பயன் படுத்தப்படுகிறது. அந்த சொல் ஆட்சி முறையைக் குறிக்கும் சொற்­பி­ர­யோகம் அல்ல. அது நாடு ஒன்­றாக இருக்­கின்­றது என்­பதைக் குறிக்கும் சொற்­பி­ர­யோ­க­மாகும்.

virakesari.lk 01 03 2017