சிதைக்கப்படும் தமிழரின் பலம்
26 10 2018
சிதைக்கப்படும் தமிழரின் பலம்
தமிழ்த் தேசியத்தை முன்னிறுத்தி, அரசியல் நடத்த வருபவர்களும், அரசியல் நடத்திக் கொண்டிருப்பவர்களும், தமிழ் மக்களின் இன்றைய அடிப்படைத் தேவையைச் சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறார்களோ என்ற சந்தேகமே இப்போது ஏற்படுகிறது.வடக்கில் புதிது புதிதாக உருவெடுக்கும் கட்சிகள்தான், இந்தச் சந்தேகம் எழுவதற்குக் காரணம். தமிழ் மக்களைப் பொறுத்தவரையில், அவர்களின் இன்றைய முக்கியமான அரசியல் ரீதியான தேவை, உரிமையை உறுதிப்படுத்திக் கொள்வதும், நிலையான அரசியல் தீர்வு ஒன்றை எட்டுவதும் தான்.தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நிலையானதும் நிரந்தரமானதும் தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்ற, அவர்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய தீர்வு ஒன்று எட்டப்பட்டு விட்டால், இன்றுள்ள எல்லாத் தமிழ்க் கட்சிகளுமே, காலாவதியாகி விடும் என்று தான் தோன்றுகிறது.
தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளைத் தீர்க்கின்ற, உரிமைகளை வென்றெடுப்பதற்கான இலக்குகளை முன்னிறுத்தியே, பெரும்பாலான கட்சிகள் இயங்குகின்றன. தமிழ் மக்களின் அபிலாஷைகள் நிறைவேற்றப்பட்டு விட்டால், இந்தக் கட்சிகள் தமது கொள்கைகளை மாற்றிக் கொள்ள வேண்டியிருக்கும்.இந்தியாவின் சுதந்திரத்தை வென்றெடுப்பதற்காகவே, மகாத்மா காந்தி இந்திய தேசிய காங்கிரஸை உருவாக்கினார். இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைக்கப் போவது, உறுதியான பின்னர், இந்திய தேசிய காங்கிரஸைக் கலைத்து விடவே காந்தி விரும்பினார். ஆனால், அவருடன் கூட இருந்த ஜவஹர்லால் நேரு, இந்திய தேசிய காங்கிரஸை அரசியல் கட்சியாக வைத்திருக்க விரும்பினார். அதை வைத்து, அவர்கள் அரசியல் செய்தனர்.
இந்தியாவின் சுதந்திரத்துக்காக உருவாக்கப்பட்ட காங்கிரஸ், சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகளுக்குப் பின்னரும், எப்படி ஒரு கட்சியாக நிலைத்திருக்கிறதோ அதுபோன்றே, தமிழ் மக்களுக்கு நிலையான தீர்வு ஒன்று கிடைத்த பின்னரும், தமிழ்க் கட்சிகள் இயங்கக்கூடாது என்றில்லை. ஆனால், அவை தமது இலட்சியத்தை மாற்றியமைத்துக் கொள்ள வேண்டியிருக்கும்.எனினும், அப்படியான நிலை தமிழ்க் கட்சிகளுக்கு வந்து விடும் போலத் தெரியவில்லை. ஏனென்றால், தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றிக் கொடுக்கும், வாய்ப்போ சூழலோ, தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. எனவே, தமிழ்த் தேசியத்தை முன்னிறுத்தி, அரசியல் செய்து வரும் கட்சிகள், தாராளமாகவே தமது நீண்டகாலப் பயணத்தை முன்னெடுத்துச் செல்ல முடியும்.
1980களின் தொடக்கத்தில், தமிழீழக் கோரிக்கைகளை முன்வைத்து, எப்படி புற்றீசல்களைப் போன்று ஆயுதப் போராட்ட இயக்கங்கள் தோன்றினவோ, அதுபோலத் தான், 2009 இற்குப் பிந்திய அரசியல் சூழலில், புதிது புதிதாகக் கட்சிகளும் கூட்டமைப்புகளும் உருவாகி வருகின்றன.ஆயுதமேந்திப் போராடும் கடுமையான முயற்சிகளில் பல இயக்கங்கள் ஈடுபட்டிருந்த அந்தக் காலகட்டத்தில், அவ்வாறான எந்த முயற்சிகளிலும் ஈடுபடாமல், வெறுமனே நான்கைந்து சுவர்களின்மேல், சுவரொட்டிகளை ஒட்டிவிட்டுத் தம்மையும் ‘இயக்கம்’ என்று கூறித் திரிந்தவர்களே, அப்போது அதிகமாக இருந்தார்கள்.அவர்கள் எல்லோருமே, 1986 இற்குப் பின்னர், போன இடம் தெரியவில்லை. அவர்களின் இயக்கங்களுக்கும் என்ன நடந்தது என்றும் தெரியாது.
கிட்டத்தட்ட அதேபாணியில் தான், ‘நாங்களும் அரசியல் செய்ய வருகிறோம்; அரசியல் கட்சிகளை உருவாக்குகிறோம்’ என்று பலர் கிளம்பி இருக்கிறார்கள்.தமிழ் மக்களின் தேவைகள் என்ன, அதை அடைவதற்கான வழிகள் என்ன? போன்ற அடிப்படைப் புரிதல் கூட இல்லாமல், பல அரசியல்வாதிகள் இருக்கிறார்கள் போலத்தான் தெரிகிறது.வடக்கு மாகாண அமைச்சராக இருந்த அனந்தி சசிதரன், கடந்தவாரம், ‘ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகம்’ என்ற பெயரில் புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்திருக்கிறார்.ஏற்கெனவே, நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த வி.நவரத்தினம் 1969இல் ஆரம்பித்த, தமிழர் சுயாட்சிக் கழகத்தைப் பின்பற்றியே, இந்தக் கட்சி உருவாக்கப்பட்டிருக்கிறது.அப்போது, ஐ.தே.க அரசாங்கத்துடன் இணைந்து, அடையாள அட்டை சட்டமூலத்துக்கு ஆதரவாக, தமிழரசுக் கட்சி வாக்களித்திருந்தது. வி.நவரத்தினம் அதை எதிர்த்து வாக்களித்தார். அதனால் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதன் பின்னரே, அவர் தமிழர் சுயாட்சிக் கழகத்தை ஆரம்பித்தார்.
அதேவழியில்தான், தமிழரசுக் கட்சியுடன் முரண்பட்டு, அந்தக் கட்சியில் இருந்து ஒதுக்கிவைக்கப்பட்டிருந்த அனந்தியும் ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகத்தை ஆரம்பித்திருக்கிறார். ஏற்கெனவே, தமிழரசுக் கட்சியில் இருந்து அதிருப்தி கொண்டவர்கள் சிலர், அதிலிருந்து வெளியேறி, ‘ஜனநாயகத் தமிழரசுக் கட்சி’ என்ற பெயரில் இயங்கி வருகின்றனர்.இப்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களையும் வெளியேற விரும்புபவர்களையும் ஒருங்கிணைத்துச் செயற்படுவதற்காக, புதிய கட்சியை ஆரம்பித்திருப்பதாக, காரணமொன்றை அனந்தி முன்வைத்திருக்கிறார்.
2013 மாகாணசபைத் தேர்தலில், 87 ஆயிரம் விருப்பு வாக்குகளைப் பெற்றிருந்த அவர், தனக்குப் பின்னால், மிகப்பெரியதோர் அரசியல் பலம் இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்.ஆனாலும், அவரது கட்சியின் ஆரம்ப நிகழ்வில், 50 பேர் கூடப் பங்கேற்காமல் போனது தான் துயரம். அனந்தியை உசுப்பேற்றி விட்டு, அவரைப் புதிய கட்சியை ஆரம்பிக்கத் தூண்டிய அரசியல்வாதிகள் பலரும் கூட, அந்த நிகழ்வுக்கு வரவில்லை. இதுதான் அரசியல் என்பதை, அவர் புரிந்து கொள்ள நீண்ட காலம் செல்லும்.தமிழரசுக் கட்சியை ஆரம்பித்தவர்களில் ஒருவரான வி.நவரத்தினத்துக்கே ‘அந்த அரசியல்’ புரியாத போது, ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் அரசியலுக்கு வந்த அனந்தி போன்றவர்களுக்கு, அந்த அரசியலைப் புரிந்து கொள்ள இன்னும் காலம் தேவை. இதுபோல இன்னும் பலர், தமிழ் மக்களின் உரிமைகளைப் பெற்றுக் கொடுக்கும் இலக்குகளுடன் கட்சிகளை உருவாக்கி வருகிறார்கள். அவர்களில் ஒருவராக, வடக்கின் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரனும் இடம்பெற்றிருக்கிறார்.அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றான ஒரு கட்சியை, உருவாக்கும் நோக்கில், தனது கட்சிக்குத் ‘தமிழ் மக்கள் கூட்டணி’ என்று பெயரிட்டிருக்கிறார்.
இதனால் தமிழ் அரசியல் பரப்பில், கட்சிகள்தான் பெருகிக் கொண்டிருக்கின்றவே தவிர, தமிழ் மக்களை ஒருங்கிணைக்கும், பணிகளை யாரும் முன்னெடுக்கும் நிலையில் இருப்பதாகத் தெரியவில்லை.இன்றைய நிலையில் கட்சிகளோ சின்னங்களோ தமிழ் மக்களுக்கு அவசியமோ முக்கியமோ அல்ல. எல்லாத் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளினதும் கொள்கை, தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை வென்றெடுப்பது தான்; சமஸ்டித் தீர்வை மய்யப்படுத்தியது தான்.ஆனாலும், கல்லில் நார் உரிக்கின்ற அந்த முயற்சியைச் சாத்தியப்படுத்துவதற்காக, தமிழ் மக்களை அரசியல் மயப்படுத்தும், பணிகளை, எந்த அரசியல் கட்சியுமே முன்னெடுக்கவில்லை. வெறும் அறிக்கை அரசியலுக்குள் தான், இன்னமும் உழன்று கொண்டிருக்கின்றன.
தமிழ் மக்களின் அரசியல் போராட்டங்களுக்காக, சில ஆயிரம் பேரைக் கூட, அணி திரட்ட முடியாத வங்குரோத்து நிலையில் தான், தமிழ்க் கட்சிகள் எல்லாமே இருக்கின்றன. இப்படியான நிலையில், புற்றீசல்களைப் போல புதிதாக அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் பெருகுவது, தமிழ்த் தேசிய அரசியலுக்கு ஆரோக்கியமான ஒன்றாகத் தெரியவில்லை.தமிழ்க் கட்சிகள் எல்லாமே, தமது கொள்கையின் வழி நடப்பதாகக் கூற முடியாது. அதற்காக, எல்லாக் கட்சிகளுமே, உதவாதவை என்று ஒதுக்கி விடவும் முடியாது. புதிய கட்சிகளை ஆரம்பிப்பதால், தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை வென்று விடலாம் என்ற கற்பனை ஆபத்தானது. அது, கட்சிகளைப் பெருக்குமே தவிர, தமிழ்த் தேசிய அரசியலின் பலத்தைச் சிதைத்து விடும்.ஏற்கெனவே தமிழ்க் கட்சிகளுக்கிடையில் காணப்பட்ட பிளவுகளைப் பயன்படுத்திக் கொண்டு, பேரினவாதக் கட்சிகள் வடக்கில் தலையெடுக்கத் தொடங்கி விட்டன. மேலும் மேலும், தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் பிளவுபடும் போதும், பிரிந்து செல்லும் போதும், இந்த நிலை இன்னும் மோசமாகும். இது ஒரு கட்டத்தில் பேரினவாதக் கட்சிகளே வடக்கு மாகாணசபையை பங்கு போட்டுக் கொள்ளும் நிலைக்கும் வித்திடலாம்.
அரசியல் ரீதியாப் பொது இலக்கில் ஒன்றுபட்டுச் செயற்படத் தமிழ்த் தலைமைகளும், அரசியல்வாதிகளும் முன்வராத போது, அவரவர் தமது கொள்கையை முன்னிறுத்திக் கட்சிகளைத் தொடங்கிக் கொண்டிருக்கும் போது, தமிழ்த் தேசிய பலம் சிதைந்து கொண்டே செல்லும். அதுதான் வரும் நாள்களில் நடக்கப் போகிறதேயன்றி, புதிய கட்சிகளின் பெருக்கம், தமிழ் மக்களுக்கான அரசியல் அடையாளங்களையும் உரிமைகளையும் காப்பாற்றுவதற்கான ஒன்றாக இருப்பதற்கு வாய்ப்புகள் ஏதும் தென்படவில்லை.
இந்தத் தருணத்தில், “தமிழ் மக்களை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்” என்ற தந்தை செல்வாவின் கருத்தே, நினைவுக்கு வருகிறது. tamilmirror.lk 26 10 2018
விக்னேஸ்வரனும் குழப்பங்களும்
11 10 2018
விக்னேஸ்வரனும் குழப்பங்களும் – கபில்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வளர்ச்சியை சிங்கள ஊடகங்கள் ஒருபோதும் ஆரோக்கியமான ஒன்றாக வெளிப்படுத்தியதில்லை. அச்சுறுத்தலுக்குரிய ஒரு வளர்ச்சியாகவே, கூட்டமைப்பை தமது வாசகர்களுக்கு அறிமுகப்படுத்த முற்பட்டன.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பற்றிய மிகையான, பொய்யான புரளியான செய்திகளை வெளியிடுவதும், நாட்டின் இறைமைக்கும், பாதுகாப்புக்கும் ஆபத்தை விளைவிக்கக் கூடியவர்களாக அடையாளப்படுத்துவதும், வழக்கமான போக்காகவே இருந்து வந்துள்ளது
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ் ஊடகப் பரப்பில் மாத்திரமன்றி இப்போது சிங்கள, ஆங்கில ஊடகப் பரப்பிலும் அதிகளவில் உலாவும் ஒருவராக மாறியிருக்கிறார்.வடக்கில் இராணுவ இருப்புக்கு எதிரான அவரது நிலைப்பாடுகள், சமஷ்டி தொடர்பான அவரது கருத்துகள் என்பன முதலமைச்சர் விக்னேஸ்வரனை எதிர்மறையான கோணத்தில் காட்டுவதில் சிங்கள ஊடகங்கள் அதிக கவனம் செலுத்தி வந்தன.வடக்கு மாகாண சபையின் ஆயுள்காலம் முடிவுக்கு வர இன்னும் 25 நாட்கள் வரையே இருக்கின்ற நிலையில், முதலமைச்சர் விக்னேஸ்வரனின் அடுத்தகட்ட அரசியல் பயணம் பற்றிய செய்திகள், விவாதங்களுக்கு சிங்கள, ஆங்கில ஊடகங்கள் இப்போது, அதிக முக்கியத்துவத்தை கொடுக்க ஆரம்பித்துள்ளன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வளர்ச்சியை சிங்கள ஊடகங்கள் ஒருபோதும் ஆரோக்கியமான ஒன்றாக வெளிப்படுத்தியதில்லை. அச்சுறுத்தலுக்குரிய ஒரு வளர்ச்சியாகவே, கூட்டமைப்பை தமது வாசகர்களுக்கு அறிமுகப்படுத்த முற்பட்டன.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பற்றிய மிகையான, பொய்யான புரளியான செய்திகளை வெளியிடுவதும், நாட்டின் இறைமைக்கும், பாதுகாப்புக்கும் ஆபத்தை விளைவிக்கக் கூடியவர்களாக அடையாளப்படுத்துவதும், வழக்கமான போக்காகவே இருந்து வந்துள்ளது.இத்தகைய பின்னணிச் சூழலில் இருந்து பார்க்கும் போது, முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு சிங்கள ஊடகப் பரப்பில் அதிகரித்துள்ள முக்கியத்துவத்தை புரிந்து கொள்வது கடினமல்ல. அதாவது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பிளவுபடுத்தி, பலவீனப்படுத்தும் வாய்ப்புள்ளவராக அவரை அடையாளம் கண்டுள்ள சிங்கள ஊடகங்கள், அதனைச் சார்ந்த செய்திகளை வெளிப்படுத்துவதில் அக்கறை கொண்டுள்ளன போலும்.
அண்மையில் ஒரு சிங்கள இதழில் வெளியான செய்தியை ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டிருந்தது. அடுத்த மாதம் முதலமைச்சர் விக்னேஸ்வரன் புதிய கட்சியை-, கூட்டணியை அறிவிக்கப் போகிறார் என்பதே அந்தச் செய்தியின் சுருக்கம்.அவருடன், ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியும், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸும் கூட்டுச் சேரப் போவதாகவும், அந்தச் செய்தியில் கூறப்பட்டிருந்தது.இந்த இரண்டு கட்சிகளும், அவற்றின் தலைவர்களும் கீரியும் பாம்புமாகவே இருக்கிறார்கள். இற்றை வரைக்கும் அவர்களுக்குள் இணங்கிப் போவதற்கான எந்த சமிக்ஞைகளும் இல்லை என்பது தான் உண்மை. அதனை சிலவேளைகளில் குறித்த சிங்கள ஊடகம் அறியாமல் இருந்திருக்கலாம்.அதுபோக, இன்னொரு சிங்கள ஊடகத்துக்கு ஆனந்தசங்கரி ஒரு செவ்வியைக் கொடுத்திருந்தார். அதில் அவர், முதலமைச்சர் விக்னேஸ்வரன் அரசியலுக்குப் பொருத்தமானவரில்லை,அவர் தமிழ் மக்களுக்கு எதையாவது செய்ய விரும்பினால் வேறேதாவது வழியில் முயற்சிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.முதலமைச்சர் விக்னேஸ்வரன் முன்வந்தால், அவருக்கு தமது கட்சியான தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமைப் பதவியைத் தந்து விடத் தயாராக இருக்கிறேன் என்று சில காலத்துக்கு முன்னர் கூறிய ஆனந்தசங்கரி தான் இப்போது, அவருக்கு அரசியல் சரிப்பட்டு வராது என்று கூறியிருக்கிறார்.அவர் இப்படிக் கூறுவது புதிதான விடயமல்ல தான்.என்றாலும்,விக்னேஸ்வரனின் கூட்டணியில், ஆனந்தசங்கரியின் கட்சியும் இடம்பெறப் போகிறது என்று ஒரு சிங்கள ஊடகமும், அவருக்கு அரசியல் சரிப்பட்டு வராது என்று அதே ஆனந்தசங்கரி கூறியதை இன்னொரு சிங்கள ஊடகமும் சமகாலத்தில் செய்தியாக்கியிருந்தமை தான் ஆச்சரியமானது.
கிட்டத்தட்ட இதே முரண்பட்ட கருத்துச் சூழல் முதலமைச்சர் விக்னேஸ்வரனிடம் இருந்தும் வெளிப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறது.ஓரிரு வாரங்களுக்கு முன்னர் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்திருந்த செவ்வியில், 2009இல் ஏற்றுக்கொண்ட வகிபாகம் மற்றும் அணுகுமுறையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தோல்வி கண்டு விட்டது என்று கூறியிருந்த முதலமைச்சர் விக்னேஸ்வரன், கடந்தவாரம், அதே கூட்டமைப்பில் போட்டியிடத் தயார் என்றும் கூறியிருக்கிறார். (8ஆம் பக்கம் பார்க்க)
விக்கினேஸ்வரனும்…. (தொடர்ச்சி)
அதற்காக அவர் சில நிபந்தனைகளை முன்வைத்திருக்கிறார் என்பது வேறு விடயம்.கூட்டமைப்பை ஒரு அரசியல் கட்சியாகப் பதிவு செய்து, கூட்டமைப்பின் தலைமைத்துவத்தில் மாற்றம் செய்யப்பட்டால், மீண்டும் கூட்டமைப்பில் போட்டியிடலாம் என்ற வகையில் அவர் கருத்து வெளியிட்டிருக்கிறார்.கூட்டமைப்பை பதிவு செய்வதோ, கூட்டமைப்பு தலைமைத்துவத்தில் மாற்றங்கள் செய்யப்படுவதோ நடக்கக்கூடிய காரியமன்று. இது அவருக்குத் தெரிந்ததால் தான் அப்படிக் கூறினாரோ தெரியவில்லை.எதுஎவ்வாறாயினும், தோல்வியடைந்து விட்டதாக அவரே அறிவித்து விட்ட கூட்டமைப்பில் மீண்டும் போட்டியிட இணங்குவது என்பது அவருக்கு தலைகுனிவான விடயம் தான்.முதலமைச்சர் விக்னேஸ்வரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட விரும்புகிறாரோ இல்லையோ தெரியவில்லை. ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான பங்காளிக் கட்சியாக தமிழரசுக் கட்சி அவரை நிறுத்தத் தயாராக இல்லை என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது.
விக்னேஸ்வரன் வெளியேறுவது, கூட்டமைப்பைப் பலவீனப்படுத்தும் என்று புளொட் கருதினாலும், விக்னேஸ்வரனுக்குப் பின்னால் ரெலோவின் ஒரு குறிப்பிட்ட சிலர் சென்று விடக் கூடும் என்ற கருத்துக்கள் காணப்பட்டாலும், தமிழரசுக் கட்சிக்குள் அவருக்கு எதிரான நிலை வலுப்பெற்று விட்டது.அண்மைக்காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பற்றியும், அதன் தலைமைத்துவம் பற்றியும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் வெளியிட்ட கருத்து, அவரைத் தொடர்ந்து கூட்டமைப்புக்குள் ஒட்ட வைத்திருப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டவர்களையும் கூட சலிப்படைய வைத்து விட்டது.விக்னேஸ்வரன் இல்லாமல் மாகாணசபைத் தேர்தலை எதிர்கொள்வதற்கு தமிழரசுக் கட்சி தயாராகி விட்டது.விக்னேஸ்வரனுக்கும், கூட்டமைப்புத் தலைமைக்கும் இடையிலான ஆகப் பிந்திய விரிசல் தீவிரமடைந்த பின்னர், சம்பந்தனுக்கும், விக்னேஸ்வரனுக்கும் இடையில் சந்திப்பு நடக்கப் போவதாக பரவலான செய்திகள் வெளியாகின. அதுபற்றிய எதிர்பார்ப்புகளும் பலமாக காணப்பட்டன.
வேண்டா வெறுப்பாக அத்தகைய சந்திப்புக்கான வாய்ப்புகள் கோரப்பட்ட போதும், அதற்கான சூழல் உருவாகவில்லை.தமக்கும் சம்பந்தனுக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று சொல்லிக் கொண்டே, கூட்டமைப்பின் தலைமை மீது முதலமைச்சர் பழியைப் போட்டுக் கொண்டிருந்தது சம்பந்தனுக்குப் பிடிக்காமல் போயிருக்கலாம்.அவரும் கூட, தன்னை விக்னேஸ்வரன் சந்திக்க விரும்பினால் எப்போதும் சந்திக்கலாம் என்று கூறி விட்டு, அதற்கான வாய்ப்பைக் கொடுக்காமல் நழுவிக் கொண்டு வருகிறார்.ஆக, இப்போதைய நிலையில், இரண்டு பேரும் சந்தித்துக் கொள்வதை விரும்பவில்லை.. அல்லது சந்திக்காமல் இருப்பதே நல்லது என்று அவர்களுக்குள் ஓர் இணக்கம் உருவாகியிருப்பதாகவே தோன்றுகிறது.
வடக்கு மாகாண சபையின் ஆயுள்காலம் முடிந்த பின்னர், தமிழ் மக்கள் பேரவையின் நடவடிக்கைகளில் கூடுதல் கவனம் செலுத்தப் போவதாக விக்னேஸ்வரன் கூறியிருக்கிறார்.அவரது அடுத்தகட்ட அரசியலுக்கான தளம் அதுவே என்பதால், அதன் மீது கவனம் செலுத்துவதே அவசியமாக இருக்கும்.எனினும், முதலமைச்சர் பதவி போன பின்னர் தன் மீது வரக் கூடிய குற்றச்சாட்டுகளை சமாளிக்க இப்போதே பாதுகாப்பு வியூகங்களை அவர் வகுக்கத் தொடங்கி விட்டார்.வடக்கு மாகாண சபையின் வினைத்திறன் தொடர்பாக, தன் மீது சரமாரியான குற்றச்சாட்டுகள் வரும் வாய்ப்பு இருப்பதை உணர்ந்து இப்போதே- அதிகாரத்தில் இருக்கும் போதே- தரவுகளைத் திரட்டி ஒரு அறிக்கையைத் தயார்படுத்திக் கொண்டிருக்கிறார்.வடக்கு மாகாண சபை என்ன செய்தது என்ற விளக்கங்களைக் கொடுப்பதே அந்த அறிக்கை. அடுத்த கட்ட அரசியல் பயணத்துக்கான தடைகளை அகற்றுவதற்கு இந்த அறிக்கை முதலமைச்சருக்கு முக்கியமானது.ஏனென்றால், வரும் நாட்களில், கூட்டமைப்புத் தலைமை கூட, “எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ளுங்கள் என்று தான் முதலமைச்சரிடம் கொடுத்தோம், அதனை அவர் கெடுத்து விட்டார்” என்று, தான் பிரசாரம் செய்யப் போகிறது.அதனை எதிர்கொள்வதற்குத் தான், முதலமைச்சரும் இத்தகைய அறிக்கையை வெளியிடத் தயாராகி வருகிறார். அத்துடன், வடக்கு மாகாணசபையின் தோல்விக்கும், சபையின் ஒரு பகுதி உறுப்பினர்களே காரணம் என்ற குற்றச்சாட்டையும் முதலமைச்சர் இப்போதே அழுத்தமாக கூற முற்பட்டிருக்கிறார்.
2013ஆம் ஆண்டு முதலமைச்சர் வேட்பாளராக விக்னேஸ்வரன் முன்னிறுத்தப்பட்ட போது கூட்டமைப்புக்குள்ளேயும் மாற்றுக் கருத்துக்கள் இருந்தன. நீதியரசர் ஒரு சிறந்த நிர்வாகியாக இருப்பாரா என்ற வலுவான கேள்வி இருந்தது.முதலமைச்சர் பதவி அவரை விட்டுச் செல்லும் இந்தச் சூழலிலும் கூட இத்தகைய கேள்வி இன்னும் வலுவடைந்திருக்கிறதே தவிர குறையவில்லை.விக்னேஸ்வரன் பற்றிய அரசியல் பார்வைகள் மாற்றமடைந்திருந்தாலும், அவர் மீதான அரசியல் வசீகரத்தன்மை குறைந்து விட்டதாகத் தெரியவில்லை.அந்த வசீகரத் தன்மை எந்தளவுக்கு அவருக்கு வாக்குகளைப் பெற்றுத் தரும் என்பதை பொறுத்திருந்து தான பார்க்க வேண்டும். ilakkiyainfo.com 30 09 2018
ஈழம்: பேரழிவும் பின்னடைவும் ஏன்?
05 10 2018