போராட்டங்களுக்கும் தமிழ் மக்களுக்குமான இடைவெளி?
23 09 2019
போராட்டங்களுக்கும் தமிழ் மக்களுக்குமான இடைவெளி?
மூன்றாவது எழுக தமிழ்ப் போராட்டத்தில், மக்களைப் பங்கெடுக்கக் கோரும் பத்திரிகை விளம்பரங்கள், கடந்த வாரம் வெளியாகியிருந்தன. எதிர்வரும் 16ஆம் திகதியன்று, யாழ்ப்பாணம் முற்றவெளியை நோக்கி தமிழ் மக்கள் திரள வேண்டும் என்று, அந்த விளம்பரங்கள் கோருகின்றன. அந்த விளம்பரங்களை முன்வைத்து, பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் அரசியல் நையாண்டிப் பதிவுகளும் விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன. குறிப்பாக, மக்கள் எழுச்சிப் போராட்டமொன்றுக்குப் பத்திரிகையில் விளம்பரம் கொடுத்து, கூட்டம் சேர்க்க வேண்டிய நிலைக்கு, தமிழ் மக்கள் பேரவையும் அதன் இணைச் சக்திகளும் வந்துவிட்டதாக் குறை கூறப்படுகின்றது.
போராட்டங்கள், தம்மை வலுப்படுத்திக் கொள்வதற்காக மக்களை அடையும் வழிகள் குறித்து சிந்தித்தாக வேண்டும். ஏனெனில், போராட்டங்களின், குறிப்பாக, விடுதலைப் போராட்டங்களின் இருப்பும், அதன் வெற்றியும் மக்களின் பங்களிப்பிலேயே தங்கியிருக்கின்றன. ஒரு காலத்தில் உடல் அசைவின் வழியும் ஒலி வடிவிலும் தகவலைப் பரப்பிய மனிதன், பின்னொரு காலத்தில் மொழி என்கிற மிகச் சிறந்த வழியைக் கண்டுபிடித்தான். இன்றைக்கு அது, பல்கிப்பெருகி, மொழியை அடிப்படையாகக் கொண்ட ஊடக- ஊடாட்ட முறையை ஏற்படுத்தியிருக்கின்றது. அப்படியான நிலையில், தகவல்களைப் பரப்புவதற்காகவும் பிரசாரத்தையும் முன்னெடுப்பதற்காகவும் சமூக ஊடகங்களையோ, பிரதான ஊடகங்களையோ பயன்படுத்துவது தப்பில்லை.
சிலவேளை, போராட்டங்களுக்கான அழைப்பு என்பது துண்டுப்பிரசுரங்கள், சுவரொட்டிகள் வழியே விடுக்கப்படவேண்டியவை என்கிற வரையறுக்கப்பட்ட மனநிலையில் தங்கியிருப்பவர்களுக்கு, பத்திரிகை விளம்பரங்கள், நையாண்டி எண்ணத்தை ஏற்படுத்தியிருக்கலாம். அதைப் பெரிதாகக் கவனத்தில் கொள்ள வேண்டியதில்லை.ஆனால், எழுக தமிழ் போன்ற எழுச்சிப் போராட்டமொன்றுக்கான தேவை அதிகமாகவுள்ள சூழலில், அந்தப் போராட்டம் குறித்து மக்களிடம் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாத நிலையே காணப்படுகின்றது. சில தருணங்களில், எழுக தமிழ் போன்ற போராட்ட வடிவங்களை ஒருவித விரக்தி, எரிச்சல் மனநிலைகளில் எதிர்கொள்ளும் கட்டமும் மக்களிடம் ஏற்பட்டிருக்கின்றது. இதற்கான காரணம் என்ன, எங்கே தவறு நிகழ்ந்திருக்கின்றது, அதனை எவ்வாறு சரி செய்வது? என்ற கேள்விகளை தமிழர் தரப்பு எழுப்பி, அதற்கான பதிலைத் தேட வேண்டும். அதுதான், விடயங்களைச் சரி செய்ய உதவும்.எப்போதுமே, கேள்விகளை எழுப்புவது சார்ந்து தமிழ்த் தரப்பு பின்நின்றதில்லை. அனைத்து விடயங்களிலும் சந்தேகங்களையும் கேள்விகளையும் தொடர்ச்சியாக எழுப்பி வந்திருக்கின்றது. ஆனால், அந்தக் கேள்விகளுக்கான பதில்களை அடையும் வழிமுறைகள் சார்ந்து எந்தவித அர்ப்பணிப்பையும் வெளியிடுவதில்லை என்பதுதான், கேள்விகள் பதில்களின்றி தொடர்வதற்கும் அவை பிரச்சினைகளாகப் பல்கிப்பெருகுவதற்கும் காரணம். பதில்களை அடைவதற்கான வழிகள் குறித்து தமிழ்ப் புலமைத் தரப்பும் அரசியல் தரப்பும் வெற்றிகரமான படிகளில் ஏறியிருந்தால், தோல்விகளின் அளவு குறைக்கப்பட்டிருக்கும். பிரச்சினைகள் மெல்ல மெல்ல கலைந்து போயிருக்கும்.
முள்ளிவாய்க்கால் முடிவுக்குப் பின்னரான கடந்த பத்து ஆண்டுகளில், தமிழ்த் தேசியப் போராட்டம் என்பது இரண்டு கட்டங்களில் தன்னை நிலைநிறுத்த எத்தணிக்கின்றது. ஒன்று, மக்கள் போராட்டங்கள் வழியாக. மற்றையது, தேர்தல் வாக்களிப்பினூடாக. மோசமாக தோற்கடிக்கப்பட்ட தரப்பொன்று, தன்னுடைய அரசியல் அடிப்படைகள் குறித்தும், அதனைத் தக்கவைப்பது குறித்தும், முழுமையாக இல்லாவிட்டாலும், அரைகுறையாகவேனும், இந்த இரண்டு வழிகளில் இயங்கிக் கொண்டிருக்கின்றது என்பது ஒருவித ஆசுவாசம்தான். ஆனால், அந்த அரைகுறை நிலையிலிருந்து பூரண நிலை நோக்கி அல்லது நேர்மறை நிலை நோக்கி நகருவதற்கான வழிகளைக் கண்டு அடையாது இருப்பதுதான், தோல்விகளின் நீட்சிக்குக் காரணமாகின்றது.காணி விடுவிப்புப் போராட்டம், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான போராட்டம், போர்க் குற்றங்களுக்கான நீதிப் போராட்டம், அரசியல் கைதிகளின் விடுதலைக்கான போராட்டம் இப்படியாக மக்கள் போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன. காணாமல் ஆக்கப்பட்டவர்களை மீட்டுத்தரக் கோரும் போராட்டம் ஆயிரம் நாள்களை எட்டப்போகிறது, கேப்பாப்புலவுப் போராட்டம், அந்த மக்களின் அன்றாட வாழ்க்கையாக மாறிவிட்டது. ஆனாலும், இந்தப் போராட்டங்களை நோக்கி மக்கள் திரட்சியையோ, அதன் வழியாக அழுத்தங்களை உருவாக்கக் கூடிய கட்டங்களையோ தமிழ்த் தேசிய அரசியல் பரப்பு பெரிதாக எட்டவில்லை. அது, மக்களிடம் போராட்டங்கள் மீதான இடைவெளியை அதிகப்படுத்தியிருக்கின்றன.
தமிழ்ச் சூழலில் எப்போதுமே வெற்றிபெற்ற உதாரணங்களை முன்வைத்துதான் உரையாடல்கள் நிகழ்கின்றன. தோல்வியடைந்த போராட்டங்கள் குறித்தோ, நிகழ்வுகள் குறித்தோ உரையாடல்கள் நிகழ்த்தப்படுவதில்லை. இதனால், தோல்விக்கான காரணங்களைக் கண்டடைய வேண்டும் என்கிற கடப்பாடு காணாமற்போகின்றது. வெற்றிகள் எப்போதுமே சிலிர்ப்பானவை. நேர்மறை எண்ணங்களை ஏற்படுத்தக் கூடியவை. எல்லாவற்றையும் தாண்டி கொண்டாட்டத்துக்குரியவை. அதனால், அந்தப் வெற்றிகளின் புள்ளிகளில் நிற்பதற்கே மனித மனங்கள் விரும்புகின்றன. அப்படியான வெற்றிகரமான புள்ளிகளில் நிற்பதற்குதான், முள்ளிவாய்க்கால் முடிவுகளைக் கண்ட பின்னரும், தமிழ் மக்களும் அதன் அரசியலும் விரும்புகின்றது. அங்குதான் சிக்கல் ஏற்படுகின்றது. யாராக இருந்தாலும், தோல்விகளைக் கொண்டு சுமக்க வேண்டியதில்லை.
ஆனால், அந்தத் தோல்விகளின் அனுபவத்தை, பாடமாக கற்றுத் தெளிய வேண்டும். எந்த இடங்களில் கோட்டை விட்டிருக்கிறோம், எந்தக் கணிப்புகள் எல்லாம் தவறியிருக்கின்றன என்று அக்குவேறு, ஆணிவேறாகத் தெரிந்து கொண்டிருக்க வேண்டும். அவை, திறந்த மனநிலையில், ஒரு மாபெரும் அரசியலுக்கான அத்திபாரமாக நிகழ்த்தப்பட்டிருக்க வேண்டும். அது, ஒரு காலத்துடன் நின்றுவிடாது, அடுத்தடுத்த தலைமுறைகள் வரையில் ஊடுகடுத்தப்பட்டு, உரையாடப்பட வேண்டும்.விஜய் சேதுபதியின் ஜூங்கா படத்தில் என்று நினைக்கிறேன், “புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது ப்றோ” என்றொருவர் கூறுவார். அதற்கு ஜூங்கா என்கிற தாதா சொல்லுவான், “இல்லை ப்றோ, புலி புல்லைத் தின்னனும். தின்றுவிட்டு புல்லைத் தின்ன வைத்தவனைப் போடணும் (சாகடிக்கணும்) ப்றோ” என்று. ஒரு நகைச்சுவைப் படத்தில் வரும் சாதாரண உரையாடல் இது. அதிலேயே, பிழைத்து வாழ்தலையும் அதன் அடிப்படை அரசியலையும் பேச முடிகிறதென்றால், விடுதலையை அரசியலாகவும், வாழ்வாகவும் கொண்டிருக்கின்ற ஒரு தரப்பு, தன்னைக் குறித்து எவ்வளவு சிந்திக்க வேண்டும். “நான் புலி, என்னுடைய உணவு இறைச்சிதான்” என்று நினைத்து பட்டினி கிடந்து சாவதைக் காட்டிலும், பசியை ஆற்றுவதற்காக புல்லைத் தின்றுவிட்டு உயிர்த்தப்பி, தன்னை அந்தச் சூழலில் தள்ளியவனை எதிர்கொள்வதுதான் வெற்றிகரமான படி. அது, சந்தர்ப்பவாதம்தான். ஆனால், அரசியல் என்பதே சந்தர்ப்பங்களை வெற்றிகரமாக கையாளும் உத்திதான். வெற்று இறுமாப்போடு, செத்துச் சுண்ணாம்பாவதைக் காட்டிலும், நிலைத்திருப்பதற்கான வழிகளைக் கண்டடைவதே உண்மையான அரசியல். அந்தக் கட்டங்களில் பயணிப்பதிலிருந்துதான், தமிழ்த் தரப்பு தவறியிருக்கின்றது. அதுதான், போராட்டங்கள் மீதான நம்பிக்கையீனங்களை மக்களிடம் ஏற்படுத்தியிருக்கின்றது.
மனித இயல்பே, இலக்குகள் நோக்கி இயங்குவதுதான். தமிழ் மக்களிடமும் கனதியாக, அர்த்தபூர்வமான இலக்குகள் உள்ளன. ஆனால், அவற்றை அடையும் வழிமுறைகள் குறித்துதான் பிரச்சினைகளை சந்திக்கிறார்கள். ஏனெனில், எம்முடைய வாழ்க்கை நெறி அல்லது ஒழுக்கம் என்பது இலக்குகளை அடையும் வழிமுறைகளைச் சிந்திப்பது சார்ந்து என்றைக்குமே இருந்ததில்லை. படிப்படியான முன்னேற்றம், அதன் அவசியம் குறித்து பேசப்படுவதில்லை. அதனால், வெற்றி, தோல்வி என்கிற இரு துருவாங்களாகப் பிரிந்திருக்க வேண்டியிருக்கின்றது. வெற்றியும் தோல்வியும் இரு துருவங்களாகத் தோன்றினாலும், அடிப்படையில் அவை ஒன்றை ஒன்று சார்ந்ததுதான். முழுமையான வெற்றி என்ற ஒன்று என்றைக்குமே கிடைப்பதில்லை. அதுபோல முழுமையான தோல்வி என்ற ஒன்றும் இருப்பதில்லை. அப்படியான நிலையில், அரசியல் என்பது முழுமையான வெற்றியாகவோ, தோல்வியாகவோ இருந்துவிடாது. அதை உணராது எவ்வளவு பேசினாலும், முயற்சித்தாலும் பிரயோசனம் இல்லை.
இப்போது எழுக தமிழின் வெற்றிக்காக சில தரப்புகளும், தோல்விக்காக சில தரப்புகளும் காத்திருக்கின்றன; அதனை நோக்கி இயங்குகின்றன. அவை, பெரும்பாலும் தேர்தல், கட்சி அரசியல் சார்பிலானதுதான். ஆனால், இந்தப் போராட்ட வடிவங்களின் உண்மையான வெற்றி, தோல்வி குறித்தோ, போராட்டங்களின் ஆணிவேராக இருந்த மக்கள் போராட்டங்களிடம் இருந்து அந்நியப்படுகின்றமை குறித்தோ பேசப்படுவதில்லை. அதுபற்றிப் பேசாது, எதைப் பேசினாலும், அவை நேராக அமையாது; பலனளிக்காது.
புருஜோத்தமன்தங்கமயில் tamilmirror.lk 15 09 2019
வாக்குறுதிகளை தந்துவிட்டு நிறைவேறற்ற அரசு தவறியதால் தமிழர்கள் ஏமாத்தம்
16 09 2016
வாக்குறுதிகளை தந்துவிட்டு நிறைவேறற்ற அரசு தவறியதால் தமிழர்கள் ஏமாத்தம் part 1
virakesari.lk 04 09 2019
மனிதமும் தர்மமும் மரித்து விட்ட உலகின் ஒரு நம்பிக்கை ஒளியாக விளங்குபவர் யஸ்மின்
12 09 2019
மனிதமும் தர்மமும் மரித்து விட்ட உலகின் ஒரு நம்பிக்கை ஒளியாக விளங்குபவர் யஸ்மின்
மனிதமும் தர்மமும் மரித்து விட்ட உலகின் ஒரு நம்பிக்கை ஒளியாக விளங்குபவர் யஸ்மின் சூக்கா அம்மையார் அவர்கள். உண்மைக்கும் நீதிக்குமான அனைத்துலக அமைப்பின் பொறுப்பை ஏற்று மனித உரிமை தளத்திலே ஒடுக்கப்படும் மக்களுக்காக அர்ப்பணிப்புடன் இன மத மொழிகளை கடந்து தொடர்ந்து குரல் கொடுத்துவருகிறார். ஈழத் தமிழர்கள் மீது இலங்கை அரசு மேற் கொண்ட இன அழிப்பு செயற்பாடுகளையும், இறுதி யுத்தத்திலே இலங்கை அரசு மேற் கொண்ட போர்க்குற்றங்களுக்காகவும் பாதிக்கப்பட்டவர்களின் குரலாக அவர் தீவிரமாக கடமையாற்றிவருகிறார். குறிப்பாக இலங்கை அரசபடைகள் தமிழ் பெண்கள் மீது மேற் கொண்ட வன்முறைகளின் சாட்சியங்களை தொகுத்து ஐ.நா.மன்றத்திடம் கையளித்து உலகில் உள்ள தமிழர்களின் கவனத்தை ஈர்த்தவர்.
கேள்வி: இலங்கையின் உள்நாட்டுப் போரின் போதும் அதன் பின்னரும் இலங்கை அரச படைகளினால் இழைக்கப்பட்ட கொடூரங்களை உங்களால் வழிநடத்தப்படும் உண்மைக்கும் நீதிக்குமான சர்வதேச செயற்றிட்டம் (ஐகூஒக) ஆவணப்படுத்தி வருகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியைப் பெற்றுக்கொடுப்பதில் இந்த அமைப்பு எப்படிப்பட்ட பங்களிப்பை இதுவரை வழங்கியிருக்கிறது என்பதைக் கூறமுடியுமா?
பதில்: 2011ஆம் ஆண்டு ஐகூஒக ஆரம்பிக்கப்பட்ட நேரத்தில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் மூவர் கொண்ட நிபுணர்கள் குழு தனது பணியை நிறைவுசெய்திருந்தது. அந்தக் குழுவில் நானும் அங்கம் வகித்தேன். டெனா, பிரான்சிஸ் கரிசன் போன்றோர் இந்த நிபுணர் குழுவுக்கு உதவியளித்துக்கொண்டிருந்தார்கள். அக்காலப்பகுதியில் பாதிக்கப்பட்ட பலதரப்பினரிடமிருந்தும் எங்களுக்கு தொலைபேசி அழைப்புக்கள் வந்து கொண்டிருந்தன. அத்துடன் பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலங்களும் எங்களுக்குக் கிடைத்திருந்தன. அப்படிப்பட்ட ஒரு தருணத்தில் தான் இப்படிப்பட்ட ஒரு செயற்றிட்டத்தை நிறுவ நாங்கள் முடிவு செய்தோம்.
போர்க்காலத்திலும் அதன் பின்னரும் மக்கள் மீது இழைக்கப்பட்ட கொடுமைகளை ஆவணப்படுத்துவது எமது முக்கிய நோக்கமாக இருந்தது.
ஐக்கிய நாடுகள் தாபனம் இந்த ஆவணங்களைப் பயன்படுத்தி நடவடிக்கை எடுக்கும் என்ற எதிர்பார்ப்பும் எங்களுக்கு அப்போது இருந்தது. ஆரம்ப கட்டத்தில் எங்களால் தயார்செய்யப்பட்ட அறிக்கைகள் ஏற்படுத்திய தாக்கத்தின் காரணமாக ஐநா நிபுணர் குழுவின் பணியைத் தொடர்ந்து, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரினால் ஏற்படுத்தப்பட்ட விசாரணைகள் நடைபெற்று, இறுதியாக 2015ஆம் ஆண்டு இணை அறிக்கை வெளிவரக் காரணமாக அமைந்தது. 2011 இலிருந்து 2015 வரை இக்காலப்பகுதி நீண்டிருந்த போதிலும், உண்மையைச் சொல்லப்போனால், இச்செயற்பாடுகளின்றி ஐ.நாவின் விசாரணை முயற்சிகள் சாத்தியமான நிலையை அடைந்திருக்க மாட்டாது என்றே நான் கருதுகின்றேன்.
ஓஐஎஸ்எல் என்ற ஐக்கிய நாடுகள் தாபனத்தின் விசேட அமைப்பு தனது பணிகளைச் செய்ய நாங்கள் உதவினோம். ஒரு புறத்தில் எம்மிடமிருந்த வாக்குமூலங்களை நாங்கள் அவர்களிடம் கையளித்ததுடன் பாதிக்கப்பட்ட தனிநபர்களுடனும் பாதிக்கப்பட்ட சமூகங்களுடனும் அந்த அமைப்பு நேரடியாகத் தொடர்புகளை மேற்கொள்ள நாங்கள் வழிவகை செய்தோம். ஐக்கிய நாடுகள் தாபனம் இலங்கை தொடர்பான தனது பணிகளைக் காத்திரமான முறையில் மேற்கொள்வதற்கு வேண்டிய உதவிகளை வழங்குவதே அப்போது எமது முக்கிய நோக்கமாக அமைந்திருந்தது.
இணை அறிக்கை வெளிவந்ததன் பின்னரான காலப்பகுதியில், அதாவது 2016, 2017ஆம் ஆண்டுகளில் இலங்கையில் ஒரு புதிய அரசு பதவியேற்றிருந்ததுடன் சர்வதேச சமூகமும் காணாமல் போனோர் பணிமனை (ஓஎம்பி) போன்ற செயற்பாடுகளை இலங்கை அரசு முன்னெடுக்கக் கூடியவிதத்தில் இலங்கைக்கு உரிய வாய்ப்புகளை வழங்கவேண்டும் என்ற நிலைப்பாட்டையும் கொண்டிருந்தது. இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களை விசாரணை செய்ய ஒரு நீதிமன்றை நிறுவுவதும் அவ்வேளையில் சர்வதேச சமூகத்தின் எதிர்பார்ப்பாக இருந்தது. அதே நேரத்தில் 2016ஆம் ஆண்டளவில் நீதியை நிலைநாட்டுவதற்கான உண்மையான ஆர்வத்தை இலங்கை அரசு கொண்டிருக்கவில்லை என்ற ஒரு உண்மையை நாம் தெளிவாகவே புரிந்துகொண்டோம்.
அந்த நேரத்தில் இலங்கை அரசு மக்களின் கருத்தை அறிந்துகொள்ள ஒரு கருத்துக்கணிப்பை மேற்கொள்வதற்காக ஒரு குழுவை நியமித்தது. நீதிப்பொறிமுறைகள் மற்றும் நிலைமாறுகால நீதிச் செயற்பாடுகள், செய்யப்படவேண்டிய பரிகாரங்கள் என்பன தொடர்பாக எம்மிடம் வாக்குமூலத்தை அளித்திருந்த பாதிக்கப்பட்ட மக்கள் என்ன கருத்தைக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள அந்த மக்கள் மத்தியில் நாங்களும் ஒரு கருத்துக்கணிப்பை மேற்கொண்டோம்.
எமது ஆய்வின் முடிவுகளை நாம் பகிரங்கப்படுத்தினோம். அதுமட்டுமன்றி இலங்கையில் அரசினால் இந்த நோக்கத்துக்காக நியமிக்கப்பட்ட குழுவுக்கும் எமது அறிக்கையை நாம் அனுப்பி வைத்தோம். எம்மை முற்றிலும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய விடயம் என்னவென்றால் இலங்கை அரசோ, தாம் நியமித்த குழுவின் அறிக்கையைக்கூட பெற்றுக்கொள்ள முன்வரவில்லை என்பதாகும். இலங்கையில் நடந்த உள்நாட்டுப்போரின் போது மனித உரிமை மீறல்கள் நடைபெற்றன என்பதை உறுதிப்படுத்துவதோடு அதற்கான நீதி நிலைநாட்டப்படவேண்டும் என்பதையும் மக்கள் எதிர்பார்த்தார்கள்.
குற்றவியல் தொடர்பான நீதிப்பொறிமுறையையே பெரும்பாலானோர் எதிர்பார்த்தார்கள். இலங்கை அரசாங்கத்திடம் நீதியை நிலைநாட்டும் ஆர்வம் இல்லாத ஒரு பின்புலத்தில் பொறுப்புக்கூறலை எப்படி முன்னெடுக்கலாம் என்று நாங்கள் சிந்தித்தோம். இப்படிப்பட்ட ஒரு நிலையில் நாங்கள் எப்படிச் செயலாற்றலாம் என எண்ணிப்பார்த்தோம். இவ்விடயங்கள் தொடர்பாக பல மூலோபாயங்களை நாங்கள் வகுத்தோம். உண்மையை மீட்டெடுக்கும் செயற்பாடு அவற்றிலே முக்கியமானதொன்றாக இருந்தது. போரிலே குற்றங்களில் ஈடுபட்ட தனிநபர்கள் தொடர்பான உண்மைகளை வெளியிட முடிவு செய்தோம்.
இவ்வாறாகத்தான் போர்க்குற்றங்களைப் புரிந்த தனிநபர்கள் மற்றும் குழுக்கள் தொடர்பான ஆவணக்கோப்புகளை மக்கள் அறிந்துகொள்ளக்கூடிய விதத்தில் நாம் வெளியிடத் தொடங்கினோம். போர்க்காலப்பகுதியில் இலங்கை இராணுவத்தில் முக்கிய பொறுப்பை வகித்த ஜகத் ஜயசுரிய, லத்தீன் அமெரிக்க நாடுகளில் தூதுவராகப் பணியாற்றத் தொடங்கினார். இச்சந்தர்ப்பத்தில் சர்வதேச நீதிச் சட்டங்களின் அடிப்படையில் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத்தொடங்கினோம். யாரோ சிலர், ஒருவேளை பிரேசில் நாட்டைச் சேர்ந்த இராணுவத்தினராகக்கூட இருக்கலாம் அவருக்கு முன்கூட்டியே தகவலைக் கொடுத்துவிட்டார்கள்.
இதனால் அவர் திடீரென லத்தீன் அமெரிக்க நாட்டை விட்டுத் தப்பியோடவேண்டிய நிலை ஏற்பட்டது. அவர் திடீரெனத் தப்பிச்செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதை உற்றுநோக்கும் போது அங்கு நீதி நிலைநாட்டப்பட்டதையே நாம் உணருகின்றோம். உண்மையிலே ஜகத் ஜயசுரிய தானாக விரும்பி நாட்டுக்குச் செல்லவில்லை. தொடர்ந்து அங்கு தங்கியிருக்கக்கூடிய வாய்ப்பு அவருக்கு அங்கு இருந்தது. அவர் திடீரென நாடுதிரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இது தொடர்பாக அவர் மிகவும் குழப்பமடைந்திருந்தார். அப்போது அவர் சொன்ன முதல் விடயம் தன்னால் இனிமேல் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்ய முடியாதென்பதும் அமெரிக்காவுக்கு இனி ஒருபோதும் தன்னால் பயணம் மேற்கொள்ள முடியாதென்பதையும் குறிப்பிட்டார்.
அவர் தப்பிச் சென்ற காரணத்தினால் அவர் மீது வழக்கைத் தொடர்வதில் நாம் வெற்றியடையவில்லை என்பது உண்மைதான். ஆனால் அவரது பெயர் பட்டியலில் இருக்கிறது. அவரால் இலங்கைக்கு வெளியே பயணங்களை மேற்கொள்ள முடியாது. அப்படி அவர் பயணஞ் செய்தால் அவர் கைதுசெய்யப்பட்டு பிரேசிலுக்கோ அல்லது ஏதாவதொரு இலத்தீன் அமெரிக்க நாடொன்றுக்கு நாடுகடத்தப்படும் ஆபத்து அவருக்கு இருக்கிறது. இரண்டாவதாக சவேந்திர சில்வா தொடர்பாக நாம் மேற்கொண்ட செயற்பாடுகளைக் குறிப்பிடலாம். இவரை இலங்கை அரசு ஒரு முக்கிய பதவிக்கு நியமித்திருந்தது. சவேந்திர சில்வா தொடர்பாக நாங்கள் ஒரு விரிவான ஆவணக் கோப்பைத் தயாரித்தோம். ஏனென்றால் சவேந்திர சில்வா யார் என்பதையும் போர்க்காலத்தில் அவர் எப்படிப்பட்ட செயற்பாடுகளில் ஈடுபட்டார் என்பதையும் பொதுவாக எல்லோரும் மறந்திருந்த நிலையே காணப்பட்டது.
அவர் பற்றிய ஆவணக் கோப்பை நாங்கள் பகிரங்கப்படுத்திய போது பல நாடுகளின் அரசுகளிடமிருந்தும் எங்களுக்குப் பல அழைப்புகள் வந்தன. சவேந்திர சில்வா பற்றிய ஆவணக் கோப்பின் ஒரு பிரதியை தமக்கும் அனுப்பி வைக்குமாறு அவர்கள் கேட்டிருந்தார்கள். அவர் தங்கள் நாட்டுக்குப் பயணம் செய்யும் தறுவாயில் தாம் அவருக்கு விசா வழங்குவதா? இல்லையா? என்ற முடிவை மேற்கொள்ளும் கடப்பாடு அந்த அரசுகளுக்கு இருக்கிறது. இந்த ஆவணக் கோப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களின் காரணமாக பல அரசுகள் அவருக்கு விசா வழங்க மறுக்கும் என்றே நான் கருதுகின்றேன். ஒரு போர்க்குற்றவாளியாக சவேந்திர சில்வா குற்றம் சாட்டப்படக்கூடிய நிலை இருப்பதை இந்த ஆவணக்கோப்பு சுட்டிக்காட்டுகின்றது. மே பதினெட்டாம் திகதி எமது இணையத்தளத்தில் இந்த அறிக்கையை பதிவேற்றம் செய்த பின்னர் வோஷிங்டனுக்கு நான் ஒரு பயணத்தை மேற்கொண்டிருந்தேன். அங்குள்ளவர்கள் அந்த அறிக்கையைப் பார்த்து தமது அதிர்ச்சியை வெளிப்படுத்தினார்கள். உண்மையில் போரின் போது நடைபெற்ற விடயங்களைப் பலர் இப்போது மறந்துவிட்டார்கள்.
இதன் பின்னர் நடைபெற்ற கலந்துரையாடல்களின் விளைவாக போரிலே இறந்தவர்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் ஆகியோரின் எண்ணிக்கையைக் கணக்கிடுவது ஒரு முக்கியமான விடயம் என்பதை நாம் இனங்கண்டு கொண்டோம். இதன் விளைவாக இணையத்தளத்தில் ஒரு செயற்பாட்டை நாம் முன்னெடுத்திருக்கிறோம். இவ்விடயத்தில் நிபுணத்துவம் பெற்ற பற்றிக் போல் என்பவரது உதவியை நாம் நாடியிருக்கிறோம்.
மே 17, 18, 19 ஆகிய திகதிகளில் இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள் பற்றிய தரவுகளைக் கொண்டு அங்கே காணாமல் ஆக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையைக் கணக்கிடும் முயற்சியில் நாம் ஈடுபட்டிருக்கிறோம். இந்த எண்ணிக்கையை நாம் கணக்கிடும் போது அங்கே உண்மையில் என்ன நடந்தது என்பது தொடர்பாக ஒரு உறுதியான முடிவுக்கு நாம் வரக்கூடியதாக இருக்கும். இன்றும் கூட யார் உண்மையில் உயிரோடு இருக்கிறார்கள்? யார் இறந்துவிட்டார்கள்? என்பதை எம்மால் கூறமுடியாதிருக்கிறது. எமக்குக் கிடைத்த புகைப்படங்கள் மற்றும் ஒளிநாடாக்களின் உதவியுடன் ஒரு சிலரது உடலங்களை நாம் அடையாளம் காணக்கூடியதாக இருக்கிறது என்பது உண்மைதான்.
இது பற்றிய முழுமையான உண்மை எங்களுக்குத் தெரியாது. இதன் விளைவாகத் தான் இணையத்தளத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் ஒரு பட்டியலை உருவாக்க நாம் முடிவுசெய்தோம். இத்தருணத்தில் உலகெங்கும் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களிடம் நாம் ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறோம். காணாமல் ஆக்கப்பட்ட உங்கள் உறவுகளின் புகைப்படங்கள் உங்களிடம் இருக்குமாயின் அல்லது இராணுவத்திடம் யாரையாவது நீங்கள் கையளித்திருந்தால் அவர்கள் தொடர்பான விபரங்கள் அல்லது அக்காலப்பகுதியில் யாராவது இராணுவப் பகுதிக்கு செல்வதை நீங்கள் அவதானித்திருந்தால் அவர்கள் தொடர்பான விபரங்கள் போன்றவற்றை தயவு செய்து எங்களுக்கு அனுப்பிவையுங்கள்.
எமக்குக் கிடைக்கும் இத்தரவுகளைப் பயன்படுத்தி போரின் இறுதி நாட்களில் உண்மையில் எவ்வளவு பேர் காணாமல் ஆக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற முடிவுக்கு நாங்கள் வரக்கூடியதாக இருக்கும். எமது இணையத்தளத்தில் காணாமல் ஆக்கப்பட்ட 350 தனிநபர்களின் விபரங்களை நாம் பதிவேற்றம் செய்திருக்கிறோம். இவர்களில் 29 பேர் சிறுவர்கள் என்பது முக்கியமாகக் குறிப்பிடப்படவேண்டிய விடயமாகும். இராணுவத்திடம் சரணடைந்து பின்னர் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக எமக்குக் கிடைத்த தரவுகளை நோக்கும் போது கிட்டத்தட்ட 500 பேர், போரின் இறுதியில் இராணுவத்திடம் சரணடைந்திருக்கலாம் என்ற முடிவுக்கு வரலாம் என்று இவ்விடயத்தில் நிபுணத்துவத்தைக் கொண்டிருக்கும் பற்றிக் போல் எமக்கு அறியத்தருகிறார்.
thinakkural.lk 01 07 2019